நம்பிக்கைக்குரிய மனைவி

 


"அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும். அவன் சம்பத்து குறையாது" என நீதி.31:11 கூறுகிறது. தன் மனைவி மீது ஒவ்வொரு புருஷனும் நம்பிக்கை வைக்க வேண்டும். மனைவியும் கணவன் நம்பும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகும்போதே என் எல்லா ஆஸ்திகளையும் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிறேன் என்று தான் வாக்குக்கொடுக்கின்றனர். ஆனால் நம் சொத்தை, பணத்தை நாமே வைத்து ஆளுகைச் செய்ய விரும்புகிறோம். கடினப்பட்டு உழைக்கிற ஆண்கள் தம் மனைவியை நம்பி பணத்தை விட்டுச் செல்லுகின்றனர். அதை எவ்வாறு திட்டமிட்டு செல்வவிடுவது என்பதை மனைவி யோசிக்க வேண்டும். இங்கு நான் பெண்கள் வேலைக்குச் செல்லாத குடும்பத்தைக் குறிப்பிட்டுள்ளேன் . குறிப்பாக வெளிநாடுகளில், வெளி ஊர்களில் பணிபுரிகிற ஆண்களை மையப்படுத்தி இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன்.

அதேவேளையில் இரண்டு பேர் உழைக்கிற குடும்பங்களில் தனித்தனியாக பணத்தை வைத்துக் கொண்டு நான் உழைக்கிறேன்.நான் விரும்பியபடி எல்லாம் செலவு செய்வேன். நான் விரும்பிய படி கடன் கொடுத்து வாங்குவேன். அதை நான் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது என் பணம் என்று வரட்டு கர்வத்தோடு பெண்கள் / ஆண்கள் நடப்பதும் நல்லதல்ல. கணவன் மனைவி இருவரும் பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்வது நல்லது.

இன்று கணவன் மீது மனைவிக்கு பணவிஷயத்தில் நம்பிக்கையில்லை. அது போல் மனைவி மீது கணவனுக்கு நம்பிக்கையில்லை. எப்படிச் செலவு செய்தாளோ மனைவி என்று கணவனுக்கு சந்தேகம். ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சேர்த்து வைப்பது போன்ற காரியங்களால் குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை பெருகி வருகிறது. நாம் கணவனை நம்பியிருக்கக் கூடாது என்று மனைவியும், எந்த விஷயத்திலும் மனைவியை மட்டுமே நம்பியிருந்தது விடக்கூடாது என்று கணவனும் திட்டமிடுவதால் மகிழ்ச்சியை இழக்க வேண்டியுள்ளது.

ஒரு வீட்டிற்குக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அன்று நடைபெற்ற சம்பவம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. என்னவெனில் கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்கும் போது நீ உன் பணத்தைக் கொடு என்று மனைவியைப் பார்த்து கணவனும், மற்றோரு இடத்தில கணவன் ஒரு குறிப்பிட்ட பொருளை அதிக பணம் கொடுத்து வாங்கியதால் மனைவி கோபத்தில் என் பணத்தையெல்லாம் இதற்குத் தரமாட்டேன் உங்க பணத்தை வேண்டுமானால் செலவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியதும் வேடிக்கையாக இருந்தது. பணவிஷயத்தில் நம்பிக்கையில்லாதது ஒரு விதத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கெடுக்கவே செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

IT கம்பெனிகளில் பணிபுரியும் பலக் குடும்பங்கள் லட்சக்கணக்கில் சேர்த்தாலும் தனித்தனியே வைத்துக் கொண்டு தனித்தனியாகச் சொத்துக்களை முடிக்கும் அளவிற்குச் சென்று விட்டனர். பிரச்சனை வந்ததும் தாங்கள் சேர்த்தது தங்களிடம் இருப்பதால் சுயமாக, தனியாக வாழ முற்படுகின்றனர். ஆனால் இரண்டு பெரும் சேர்த்த பணத்தை இரண்டு பேரின் பெயரிலும் சேமிப்பைத் தொடங்கினால், சொத்துக்களை வாங்கினால் கர்த்தர் இணைத்த இணைப்பின் வலிமை இன்னும் கூடும். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சூழ்நிலையும் பெருகும். கர்த்தர் இணைத்ததை பணம் பிரிக்காமல் நம்பிக்கையில் வளர வாய்ப்புள்ளது. முயற்சி செய்வோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

Comments

Popular posts from this blog

உண்மையை உரக்க சொல்வோம்

உண்மையை மூலதனமாக்கு

தேன் தடவிய வார்த்தைகள்