சிரமங்களை ஏற்க ஊக்குவிக்கும் தாய்



ஒரு குடும்பத்திலே தன் பிள்ளைகளுக்கு எந்த ஒரு வேலையையும் கொடுக்காமல் தாயே அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.  சாப்பாடு செய்யக் கூடப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.  தன் பிள்ளைகள் தன்னைப் போல் வேலை செய்து கொள்ளமாட்டார்கள்.  வேலைக்காரி வைத்துக் கொள்ளுகிற வீட்டில் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள்.  பிள்ளைகளுக்குத் திருமணமும் செய்து கொடுத்தார்கள்.  

தனிக்குடித்தனம் சென்றனர்.  வேலைக்காரியை வைத்து வேலை செய்தனர்.  வேலைக்காரி திடீரென வேலைக்கு வராமல் நின்று விட்டாள்.  முன் பின் தெரிவிக்காததால் உணவு செய்ய முடியவில்லை.  முதல் நாள் Hotel-இல் வாங்கிச் சாப்பிட்டனர்.  இரண்டாவது நாளும் வேலைக்கு வரவில்லை.  உடனடியாகப் புதிய வேலைக்காரியும் கிடைக்கவில்லை.  கணவன் தன் மனைவியைப் பார்த்துச் சாப்பாடு செய்யச் சொன்னார்.  மனைவியோ உணவைப் பாயாசம் போல் சமைத்து வைத்தாள்.  குழம்பை வாயில் வைக்க முடியவில்லை.  கணவன், மனைவி மீது கோபப்பட்டார்.  நீ போய் உங்கள் அம்மாவிடம் 15 நாள் சமையல் படித்து விட்டுப் பின்பு வீட்டிற்கு வந்தால் போதும் என்று அனுப்பி வைத்தார்.  இப்பொழுது அந்தத் தாய் வருத்தப்பட்டாள்.

பெண்களே, உங்கள் பிள்ளைகளுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பது ஒன்றும் கீழ்த்தரமான விஷயமோ, அல்லது அந்தஸ்தை இழந்து போகக்கூடிய காரியமா அல்ல.  படிக்கும் போது பிள்ளைகளுக்கு வேலையைக் கொடுக்கக் கூடாது.  வேலையைச் செய்ய வேண்டாம்.  வேலை செய்தால் படிப்பு போய் விடும் என்றே எண்ணக் கூடாது.  படிக்கிற போது எப்பொழுதும் 24 மணி நேரமும் Computer-இல் feed பண்ணுவது போல் ஏற்ற முடியாது.  படிப்பின் இடைவெளியில் பாத்திரத்தைச் சுத்தப்படுத்துதல், காய்கறிகள் வெட்டிக் கொடுப்பது, தோசை செய்வது என்று சிறு சிறு வேலைகள் செய்வதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  அவர்கள் செய்யும் போது ஏற்படும் குறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  சரியாகச் செய்வதற்கு நாம் உதவி  செய்ய வேண்டும்.  உனக்கு ஒன்றுமே செய்யத் தெரியாது.  நீ செய்கிற சாம்பாரை மனுஷன் சாப்பிடுவானா  என்று குறை கூறி வேலை செய்ய விரும்புகிற பருவத்தில் தடுக்கக் கூடாது.  அப்படித் தடுக்கும் போது நமக்கு ஒன்றுமே செய்ய தெரியாது என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.  பிற்காலங்களில் அதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் குறைந்து விடும்.  எனவே வாய்ப்புகளைக் கொடுத்துச் சரிசெய்துக் கொள்ள வேண்டும்.  

சிறு வயதிலேயே பிள்ளைகள் உலகத்தில் ஏற்படும் பாடுகளைப் பிரச்சனைகளைக் குறித்து அறிந்து கொள்ளவும், உலக நடப்புகளைப் புரிந்து பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் பழக்கப்படுத்த வேண்டும்.  "நான் இல்லாவிட்டால் உன்னை எல்லாரும் ஏமாற்றி விடுவார்கள்.  உனக்கு ஒன்றும் தெரியாது, நீ அங்கேயெல்லாம் போக வேண்டாம்.  அங்கே நான் போனால் தான் சரிவரும் என்று, நான் செய்தால் தான் புத்திசாலித்தனமாக நடப்பேன், உனக்கு ஒன்றும் தெரியாது" என்று பிள்ளைகள் வளர்ச்சிக்குத் தடைகளாக நாம் அமைந்து விடக் கூடாது.  சின்ன சின்ன சிரமங்களை ஏற்கவும், உலக நடப்புகளைப் புரிந்து கொள்ளவும் விட வேண்டும்.  திருமறையில் கூட சிறு வயதிலே அரசர்களாக மாறினவர்களைப் பார்க்கலாம்.  அதே வேளையில் தாவீதின் மகன் சாலமோன் வயது வந்த பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது தயக்கத்துடன் தான் ஆட்சிப் பொறுப்பில் வந்து அமருகிறான்.  போர் பற்றிய உந்துதல் இல்லாதவனாக இருப்பதால் தாவீதைப் போன்று தைரியத்துடன் எதிரிகளை அடக்கி ஆழ முடியவில்லை.  காரணம் தாவீது போர்க் களத்தில் நின்று எதிரிகளை விரட்டியது போன்ற அனுபவங்கள் சாலமோனுக்கு இல்லாமல் இருந்தது.  வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்ததே காரணம்.                           

பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுப்பது தவறு அல்ல. ஆனால் அவை வளர்ச்சிக்குத் தடைகளாக மாறிவிடக் கூடாது.  சிறுவயதில் நடக்கும் போது கீழே விழத்தான் செய்வோம்.  அதற்காக நம்முடைய தாய் படுக்கையிலே போட்டு வளர்த்திருந்தால் நாம் நடப்பதற்குப் பெலன் இல்லாமல் போய்விடும்.  சைக்கிள் ஓட்டக் கற்கும்போது நிச்சயமாக கீழே விழுந்து எழ வேண்டியது இருக்கும்.  ஒரு போதும் கீழே விழுந்து விடக் கூடாது என்று நினைத்தால் ஒரு நாளும் சைக்கிள் கற்க இயலாது.  எனவே பிள்ளைகள் பல காரியங்களைக் கற்றுக் கொள்வதற்கு பெண்களை அனுமதியுங்கள்.  அப்பொழுது சிறந்த மக்களாக அவர்கள் உருவாக முடியும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Website ஐ subscribe பண்ணுங்கள்  

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி