Over Dose



ஆசிரியரால் விரட்டப்பட்ட தாமஸ் என்ற சிறுவனைத் தாய் அனைத்துக் கொண்டு மகனே, நீ முட்டாள் அல்ல Brilliant Child, உன்னை உலகிற்கு Brilliant என்று விளங்கப் பண்ணுவேன் என்று சபதம் எடுத்தாள்,  அந்தத் தாய்.  இன்றும் பல பெற்றோர் தம் பிள்ளைகள் நிமித்தமாக சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.  ஆனால் சற்று வித்தியாசமாக ஓட்டப் பந்தயத்தில் பணம் கட்டி ஒவ்வொருவரும் தம் பிள்ளைகளைக் குதிரை போன்று நிறுத்தியுள்ளனர்.  தன் மானத்தைக் காப்பாற்றப் போட்டிபோடும் பிள்ளைகளாகக் காட்சியளிக்கின்றனர்.   

மாணவர்களைக் கசக்கிப் பிழிந்தாவது மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறச் செய்ய வேண்டும் என்ற வெறித்தனத்தில் அடித்து, இம்போசிஷன் போட்டு காலை முதல் இரவு வரை டியூஷன் வைத்து, பழைய Question பேப்பர் எடுத்து, விடாமல் படிக்க வைக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பொறுமையோடு கேட்கும் அளவிற்கு நேரம் இல்லை.  அரசும் மாணவர்களுக்கென்று இருந்த நீதி போதனை வகுப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கி வருகிறது.  கைத் தொழில் வகுப்புகளைக் கரையேற்றி வருகிறது.  

மாணவர்கள் சூப்பர் கம்ப்யூட்டராக இருக்க வேண்டும் என்றே பெற்றோரும் ஆசைப்படுகின்றனர்.  காலையில் 5 மணியிலிருந்து ஆரம்பிக்கும் டியூசன் வகுப்புகள், தொடர்ந்து பள்ளி அதைத் தொடர்ந்து இரவு 10 மணி வரை ஸ்பெஷல் டியூசன் வகுப்புகள். நொந்து வரும் பிள்ளைக்கு வந்தவுடன் இரவு உணவு, அதைத் தொடர்ந்து Viva, Complan, Horlicks, Bornvita இவை எல்லாம் இரவு 12 மணி வரை  தூங்காமல் இருக்க வைக்கும் டானிக்.          

என் மானத்தைக் கப்பல் ஏற்றிராதே, நான் என்னோடு வேலை பார்ப்பவரிடம் எல்லாம் உயர்வாகக் கூறியுள்ளேன்.  எப்படியும் MBBS Seat வாங்கியே ஆகணும், கவனம் பா...சொல்லிகிட்டே தான் இருக்கிறேன்.  தூங்காத பரீட்சை முடியும் வரை உனக்கு தூக்கம் வருமோ வராதோ, எனக்கு தூக்கமே வரமாட்டிங்குது.  நீ தூங்கும் போதெல்லாம் என் மனசு எனக்குள்ளே திக்.. திக்குன்னு அடிக்குது.  இப்படி கவலை இல்லாம தூங்குறானே என்ன ஆகுமோ கடவுளேன்னு இருக்கேன். 

பாரு, உனக்கு எக்ஸாம் வருதுன்னு நான் லீவு போட்டுட்டு வீட்டுல இருக்கிறேன்.  உனக்கு ஏதாவது குறை வச்சிருக்கோமா.  ஒன்னும் கிடையாது.  ஒரு வேல கிடையாது.  எப்படியாவது படிச்சிரு அவ்வளவு தான்.

இந்தாப்பாரு உனக்கு எக்ஸாம் முடியும் வரையிலும் T.V, Cell Phone, SMS, Facebook எல்லாம் மறந்துரு.  இதெல்லாம் நேரத்தை வீணடிச்சிரும்.  Youth Meeting-க்கு அதிக நேரம் செலவு பண்ணாத, friends கூட சுத்தாத, விளையாடப் போகணும்னு நினைக்காத.  விளையாடுறவங்க எல்லாம் சும்மா அலைகிற பசங்க தான்.  அவங்களோட பேசாத, சேராத, பேசாம உன் வேலைய மாத்திரம் பாரு.  

இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பெற்றோரைப் பார்த்தால் எந்த பிள்ளைகளுக்குத் தான் பிடிக்கும்.  காலையில் எழும்பின நேரத்திலிருந்து தூங்குற வரையிலும் படிப்பு என்றால் பிள்ளைகளுடன் உண்டான உறவு என்பது இல்லாமல் போய் விடுகிறது.  உறவினர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு செல்வதில்லை.  ஆலயம் செல்வதையும், நண்பர்களுடன் பழகுவதைத் தடுப்பதால் பிள்ளைகள் மனம் மிகவும் கடினமாகவும், மன அழுத்தம் நிறைந்தவர்களாகவும் மாறி விடுகின்றனர்.  

Over Expectation உடன் இருக்கும் பெற்றோரைத் திருப்திப்படுத்த படித்துப் பார்க்கின்றனர்.  பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்ற எண்ணம் வரும் போது பிள்ளைகள் பெற்றோருடன் சண்டையிட்டுத் தன்னைப் புரிந்து கொள்ள விரும்புகின்றனர்.   சில பிள்ளைகள் Exam attend பண்ணிவிட்டு நாம் சரியாக achieve பண்ண முடியாது Exam Result -க்கு முன் பயந்து தற்கொலை செய்து கொள்ளுகின்றனர்.  

கல்வி என்பது மகிழ்ச்சியோடு கற்க வேண்டியது.  வேப்பங்காய் போல் கடித்துச் சாப்பிட பிள்ளைகளை ஊக்கப்படுத்தக் கூடாது.  கல்வி என்பது அவர்கள் வாழ்க்கைக்கு அவசியம்.  ஆனால் உங்களுக்கு பிள்ளைகள் முக்கியம்.  உறவுக்கு முதல் இடம், கல்விக்கு இரண்டாம் இடம்.  

மகனே, மகளே நீ நன்றாகக்  கற்றாலும், கற்க முடியாவிட்டாலும், நான் உன்னை நேசிக்கிறேன்.  நீ தான் எங்கள் வாழ்க்கையில் முதல் இடம் என்ற உணர்வைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்க முற்பட வேண்டும்.  கல்வியினிமித்தமாக உறவு பாதிக்கப்படுவதை நீங்கள் ஒருக்காலும் அனுமதிக்காதிருங்கள்.  பெற்றோர்களே, நீங்கள் எல்லாரும் MBBS, BE., படிக்கவில்லை.  நாம் செய்ய முடியாததை நம் பிள்ளைகள் அசையவே பண்ணியே ஆக வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்.  அவரவர் திறமைகளை உணர்ந்து அதில் முன்னேற ஊக்குவிப்பதே சிறந்தது.  

சிறுவர்களாக இருக்கும் போது தான் பிள்ளைகள் பெற்றோருடன் நேரம் செலவிட முடியும்.  ஆனால் அந்தப் பருவத்தில் முழுநேரமும் tutionக்கு அனுப்பி விட்டால், உங்கள் அன்பு அவர்களுக்குக் கிடைக்காமல் போய் விடும்.  பிள்ளைகள் பெரியவர்களான பின்பு அன்பற்ற பெற்றோர்களே கண்களுக்கு முன் தெரிவார்கள்.  அன்பே பிரதானம்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com


Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி