என்னைப்போல் மாறுவாயா?

ஜெயந்தி தன் கணவனோடு எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.  உங்களுக்கும் எனக்கும் பொருத்தமே சரியில்ல உங்ககிட்ட நான் பேசினாலே எப்பொழுதும் சண்டைதான்.  தெரியாம உங்களைப் போய் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.  நமக்குள் பொருத்தமே இல்லை என்று பல நாட்களாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.  இதற்குப் பின்னர் தான் அடி தடியாக இச்சண்டை மாறியது.  

ஜெயந்திக்குத் தன கணவன் தன் விருப்பம் போல் நடந்து கொள்ள வேண்டும் எனவும், தன்னைப் போல் சிந்திக்கவும் வேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் இதுதான் பிரச்னை.  ஒரு குடும்பத்தில் ஆணுடைய விருப்பமும் பெண்ணுடைய விருப்பமும் ஓன்று போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.  ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தன்மைகள் உடையவனாக விளங்குகின்றான்.  அதில் ஆண்களுடைய மன நிலைக்கும் பெண்களுடைய மனநிலைக்கும் வேறுபாடு உள்ளது.  

பெண்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை நினைத்துப் பேசினால் அதைத்திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இருக்கும் மனநிலை உடையவர்களாக இருக்கின்றனர்.  பெண்களின் சிந்தனை ஒரு கிணற்றில் கல்லை எடுத்துப் போட்டால் எப்படி தண்ணீரின் மேல் பரப்பில் அலை பாயுமோ அப்படியே போய்க் கொண்டேயிருப்பவர்கள்.  இப்படி ஒரு காரியத்தைப் பற்றிப் பேசுவது ஆணுக்குப் பிடிப்பதில்லை.  என்ன ஒரேயடியாக சொன்னதையே சொல்லிக்கொண்டு  இருக்கிறாயே. வேறு காரியத்தைப் பற்றி யோசிக்க மாட்டியா? அந்தக் காரியத்தை விட்டு விடு.  உடைந்த ரெக்கார்டு மாதிரி நீ இருக்கிறியே,  கேட்டுக் கேட்டு எனக்கே புளிச்சிப் போச்சி, போதும் போதும் என்று ஆண், பெண் மீது கோபத்தில் சாடுவான்.  ஆனால் பெண்ணுக்கு அந்த விஷயத்தில் தீர்வு வரும் வரை அதையேத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். 

ஆண்களுடைய மனநிலை சற்று மாறுபட்டதாகப் பல்வேறு காரியங்களை சிந்திக்கிறவர்களாக இருக்கிற்றனர்.  ஒரு காரியத்தை வீட்டில் பேசியபின் வெளியே வந்தவுடன் அதனை மறந்து விடுகிறார்கள்.  வேறு காரியங்களை சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  கணவன்,  வீட்டை விட்டு வெளியே போனதும்;  வீட்டையே மறந்து விடுகிறார்கள்.  இவர்களுடைய மூளை அமைப்பும், சிந்திக்கும் திறனும் மாறுபடுவதை புரிந்து கொள்ள வேண்டும்.  

நண்பர்கள் இருவர் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்கள்.  நண்பர்கள் சில சாப்பிடும் ஐட்டங்களை ஆர்டர் பண்ணினார்.  ஆனால் அருகில்  இருந்தவருக்கு அந்த ஐட்டத்தை சாப்பிட விருப்பம் இல்லை.  எனவே மீண்டும் சில உணவு வகைகளை ஆர்டர் பண்ணிச் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட உடனே ஏற்கனவே ஆர்டர் பண்ணின உனவைப் பார்சல் பண்ணும்படி வெயிட்டெரிடம் கூறினார்.  உடனே நண்பர் கேட்டார், ஏம்ப்பா அதைப் போய் பார்சல் பண்ணுகிறாய்.  நீ தான் சாப்பிடமாட்டன்டெயே என்றார்.  உடனே மற்றவர் கூறினார்.  "நான் எதையெல்லாம் சாப்பிடமாட்டேனோ அதுவெல்லாம் என் மனைவிக்குப் பிடிக்கும்" என்றார்.

கணவன் மனைவி ஆகிய இருவரும் இருதுருவங்களாக இருந்தாலும் இணைந்து வாழமுடியும் அது அவரவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பொறுத்ததே.  விருப்பு வெறுப்புகள் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதில் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் குடும்ப வாழ்வு அமையும்.  

மனைவிக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எந்தச் சூழலில் கோபப்படுவார் எதில் மகிழ்ச்சியடைவார் என்பதை கணவன் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல.  அதே போல கணவரின் விருப்பு வெறுப்புகளை மனைவி புரிந்து கொள்ளுதலும் எளிதல்ல.  விருப்பு வெறுப்புகளைப் பொருத்தவரையில் ஒரு நபரிடமிருந்து மற்ற நபர் வேறுபடுகின்றனர்.  ஒர் ஆணின் குணத்தைக் கொண்டு எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவெடுப்பது சிக்கல்கள் ஏற்படுகின்றன.  நம்ம வீட்டுக்கு அருகில் உள்ளவர் எப்பொழுதும் வீட்டிலேதான் இருக்கின்றார்.  வேலை முடிந்ததும் முடியாததுமான வீட்டுக்குள்ளே வந்து நிற்கிறார்.  நீங்க என்னண்ணா வேலை முடிஞ்சபிறகும் ஊரைச்சுத்திக்கிட்டு மத்தவங்களுக்கு, கோயில்ல உள்ளவங்களுக்கு  ஹெல்ப் பண்ணப்போறேன் என்று ஊரைக் கெட்டி மேய்க்கிறீங்க.  ஏன் நீங்களும் அவரைப் போல மாறக்கூடாது என்று பெண்கள் கோபப்படுகின்றனர்.  

ஒரு ஆணின் வளர்ப்பு, வாழ்ந்த சூழல், குடும்பப் பின்னணி என்று எல்லாமே மனிதனைத் தாக்கிக் கொண்டே இருக்கிறது.  எனவே அவரை மற்றவரோடு ஒப்பீடு செய்ய முடியாது.  நம்முடைய குணாதிசயங்களை உடனே மாற்றமுடியாது.  எனவே நாளடைவில் மெதுவாகப் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.  எடுத்த எடுப்பில் பிறரைப் புரிந்து கொண்டுள்ளபடி, சிலரோடு வாழ முடியாது என்று நினைப்பது முட்டாள்த்தனம்.  இறைவன் கொடுத்த துணையோடு பொறுமையாக வாழ்ந்து உயர்வடைய வேண்டும்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோசமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

மேலும் பல செய்திகளை படிக்க click: blog.TdtaChristianMatrimony.com

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி