குயவன் கையில் களிமண்


திருமண வீடு ஒன்றிக்குச் சென்றிருந்தேன்.சாப்பிடுவதற்காகப் பந்தியில் உட்கார்ந்திருந்தார்கள்.  சாப்பிடுவதற்கு இலை போட்டவுடன் இரண்டு பிள்ளைகள் இலையைவைத்து விளையாடிக் கிழித்தனர்.  தொடர்ந்து உணவு வந்ததும் அவைகளை விசிரியடித்து விளையாடினர்.  தனக்குப் பிடிக்காத காய்கறிகளையெல்லாம் தூக்கி வீசினார்கள்.  யாராவது அப்படிச் செய்யக்கூடாது என்றால் வேண்டுமென்றே மீண்டும் செய்தனர் உணவை வாயால் மட்டும் சாப்பிடாமல் அந்த இடத்தையே அசிங்கம் பண்ணிப்போட்டனர்.  அந்தச் சிறுபிள்ளைகளின் தகப்பனிடம் மற்றவர்கள் கேட்டபோது சின்னப்பிள்ளைகள் அவர்களுக்கு என்ன தெரியும்.  வீட்டிலும் இப்படித்தான் செய்வார்கள் என்று சிரித்தார்.  

பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்வது தவறு என்ற உணர்வே இல்லாமல் செய்தனர்.  எனக்கு எழுந்த கேள்வி, பிள்ளைகளுக்கு இப்படிச் செல்லம் கொடுத்து வளர்ப்பது சரியா அல்லது தவறா? பிள்ளையானவனை நடத்த வேண்டிய வழியில் நடத்து.  முதிர் வயதிலும் அவன் அதை விடாதிருப்பான் என்று திருமறை கூறுகிறதே.  அப்படியிருக்கும் போது இந்தப் பெற்றோர்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள்.  பெற்றோர் எப்படி நடந்து கொள்வது சிறப்பு என்பதைக் குறித்துச் சற்று விரிவாகக் கீழே காணலாம். 

ஒரு வீட்டிற்கு நான் சென்றிருந்தேன்.  அந்த வீடு மிகவும் சுத்தமாகவும் பொருட்கள் அனைத்தும் அந்தந்த இடங்களில் நேர்த்தியாகவும் இருந்தது.  ஆச்சர்யத்தைக் கொடுத்தது.  அவர்கள் வீட்டிலிருந்த சிறு குழந்தையைப்பார்த்து இதுவெல்லாம் எப்படி என்று கேட்டேன்.  அந்தச் சிறுபிள்ளை, தன் தகப்பனைக் கண்காட்டினான்.  எங்க அப்பா வேறு எங்காவது ஒரு பொருளை வைத்து விட்டால் உலகமாக யுத்தம் நடக்கும்.  எங்கேயிருக்க வேண்டுமோ அங்கேதான் இருக்க வேண்டும்.  இடம்கூட மாறக்கூடாது.  வீட்டில் அத்தனையும் எழுதப்படாத சட்டம்தான், ஆளுகை செய்தது.  பிள்ளை, மனைவி அனைவரும் கேள்வி கேட்காமல் கீழ்ப்படியவேண்டும்.

மார்க் குறைந்து விட்டால் அடிவாங்குவதற்கு ஆயத்தமாகவே அவர்கள் வீட்டுக் குழந்தைகள் வந்து விடுவர்.  இன்று பெல்ட் அடிதான்.  இரண்டு கால்ச்சட்டைப்போட்டுக் கொள்ள வேண்டும்.  பிள்ளைகள் தண்டனையை ஏற்காத தயாராகிறார்கள்.  வளர்ந்தவுடன் எதிர்த்துப் பிடிக்கவும் வீட்டைவிட்டு வெளியே ஓடவும், ஹாஸ்டல் கிடைத்தால் சத்தமே போடாமல், வீட்டிற்கு விடுமுறைக்கு வரால் வாழ ஆரம்பிப்பார்கள்.  எனவே குழந்தைகள் வாழ்வை அடித்துத் திருந்தி விட வேண்டும் என்று எண்ணாமல், அவர்கள் புரிந்துக் கொள்ளும் அளவிற்குப் பேசி, அன்பால் மாற்ற முற்படவேண்டும்.  அந்த மாற்றங்கள் நிலையான, வெளிப்படையான, உண்மையான மாற்றமாக அமையும்,  இல்லையெனில் போலியாக மாறினதுபோல் நடிக்க ஆரம்பித்து விடுவர்.

பாதுகாப்பான பெற்றோர்கள் 

ஒரு இளைஞனைச் சந்திக்க நான் சென்றிருந்த போது அவனிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவன் தகப்பனே பதில் கூறினார்.  அந்த இளைஞனை எப்பொழுதும் தன்னோடே அழைத்துச் செல்லுவார்.  எந்தத் தவறும் அவன் செய்து விடக்கூடாது என்பதிலே கவனமாக இருந்தார்.  திருமணமான பின்பும் அவன் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அவரே கற்றுக் கொடுப்பார்.  தன் மனைவிக்கு ஒரு முழம் பூ வாங்குவது கூட தகப்பனின் அனுமதியோடுதான், ஏனென்றால் வீணாகப் பணத்தைச் செலவு செய்து விடக்கூடாது.  தகப்பனுக்குத்தான் எல்லாம் தெரியும்.  மகன் பணத்தை விரயம் செய்து விடக்கூடாது காரணம் அவனுக்கு அனுபவம் கிடையாது.  இப்படிப் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தவறு இழைத்துவிடக் கூடாது என்று தங்களுடைய பாதுகாப்பிலேயே வைத்துக் கொள்வார்கள். 

இப்படிப்பட்ட வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் பெரியவர்களான பின்பும் தன் பெற்றோரின் துணையையே நாடுவார்கள்.  அவர்களால் இந்த உலகத்தில் தனித்து வாழ முடியாது.  உலகில் ஏற்படும் போட்டிப் பொறாமைகளை எதிர் கொண்டு வாழ முடியாதவர்களாகக் காணப்படுவர்.   சில பிள்ளைகள் தன்னுடைய விருப்பத்தை வெளிக்காட்ட எண்ணிப் பெற்றோருக்கு எதிரிடையான முடிவுகளை எடுத்துப் பெற்றோரை அவமானப்படுத்தவும், பழிவாங்கவும் எண்ணித் துணியவும் செய்வர்.  

பாசத்தால் பிள்ளைகளுக்கு அடிமையாகும் பெற்றோர் 

பிள்ளைகள் மீது அதிக அன்பு செலுத்தும் பெற்றோர் பலர் இருக்கின்றனர்.  அதிக அன்பு செலுத்துவதால் பிள்ளைகளுக்கு அடிமையாக மாறிவிடுவர்.  உல்லாசப்பயணம் போகும் போது பிள்ளை அழுது வண்டியை நிறுத்தச் சொன்னால் உடனே வண்டியை நிறுத்தி விடவேண்டும்.  அருகில் உள்ள பிள்ளை ஒரு பெரிய பள்ளத்தில் விழ இருக்கும் போது கூட தன்பிள்ளை கூறினால் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றக்கூடாது.  குழந்தை ஓன்று அழும்போது தன்னிடம் இருந்த தண்ணீரைக் கொடுக்க முயலும் போது தன் பிள்ளை தண்ணீரைக் கொடுக்கக் கூடாது என்றால் கொடுக்காமல் பெற்றோர் இருப்பர்.  மீன் பிடிக்கவில்லையென்றால் வீட்டில் அனைவரும் மீன் சாப்பிடவோ அல்லது சமைக்கவோ கூடாது.  இப்படிப் பெற்றோரையே அடக்கி நடத்தும் பிள்ளைகளாகக் காணப்படுவர்.  

இப்படி வளரும் பிள்ளைகள் தனித்து இயங்குபவர்களாகவும், சமுதாயத்தில் தான் சொல்வதைப் பிறர் கேட்காததால் விரக்தியும் எளிதில் அடைவர்.  சிலவேளை ரவுடித்தனம் பண்ணுதலும், தவறானப் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்களாகவும் மாற வாய்ப்புள்ளது.  சில வேளை மனஅளவில் பாதுகாப்பானவர்களாகவும், சுயமாக முடிவெடுக்கும் தன்மையுடையவர்களாகவும் காணப்படலாம்.  எனவே பிள்ளைகளுக்குச் சரியாக வழிகாட்டலைக்  காட்ட முடியாமல் போய்விடக்கூடும்.       

பிள்ளைகள் மீது கவனம் செலுத்தாத பெற்றோர் 

ஒரு குடும்பத்தின் தலைவி அரசு உத்தியோகத்தில் நல்ல வருவாயில் வேலை பார்த்து வந்தாள்.  கணவனோ சரியான வேலையில்லாமல் ஊர் சுற்றிவந்தான்.  பிள்ளைகளைத் தாய் கவனிக்காமல், ஊர் சுற்றிவரும் கணவனையே பார்த்துக் கொள்ளச் சொல்லி விடுவாள்.  தகப்பனோ உறவினர் பார்த்துக்கொள்ளட்டும் என்று கூறிவிட்டு, ஊர் சுற்றி வருவார்.  பிள்ளைகள் பரிதாபமாகச் சாப்பாடுக்குத் தாத்தா வீட்டில் சாப்பிடவா, சித்தி வீட்டில் சாப்பிடவா என்று நிலையற்று வாழ்வர்.  இப்படிப் பெற்றோர் கவனம் செலுத்தாவிடில் பிள்ளைகளின் படிப்பில் கவனம் சிதறும்.  பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி வருவர், TV, Internet, facebook என்று நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு வாழ ஆரம்பிப்பர்.  தீய நட்புடன் வாழும் சூழலும் ஏற்படும்.  

சரியானக் கவனம் செலுத்தும் பெற்றோர்

என் பிள்ளைகளுக்கு அனைத்து உரிமையையும் கொடுத்திருக்கிறேன்.  அவர்களுக்குப் பிடித்த பெண்ணைக் கூறினாலும் நான் திருமணம் செய்து வைக்க ஆயத்தம்தான்.  கல்வியைக் கொடுத்த நான் அவர்கள் விருப்பத்தைப் புரிந்து உதவிச்செய்ய ஆயுத்தமாயிருக்கிறேன் என்றார் ஒரு தகப்பனார்.  பிள்ளைகளோ தகப்பன் பார்த்த பெண்களையே திருமணம் செய்தனர்.  எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது உலக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, பிள்ளைகளுக்கு உரிமைகளைக் கொடுத்து, சமுதாய பொறுப்புடன் வாழ ஊக்கப்படுத்தும் பெற்றோர்கள் சிறந்தவர்கள் .  பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளை அவர்களுடன் உட்கார்ந்து பேசும் அளவிற்குத் திறந்த வாசலைப் பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுப்பார்கள்.  

இப்படி வளரும் பிள்ளைகள் பிரச்சனைகள் வரும்போது இறைவனின் துணையை நாடவும், பிரச்சனைகளைத் தாங்களே எதிர்கொள்ளவும் மனப்பக்குவதைப் பெறுகின்றனர்.  பிள்ளைகள் தவறு செய்யும் போது பிரம்பால் தண்டித்தால் அவன் சாகமாட்டான், மாறாகத் தவறு என்பதைப் புரிந்துக் கொள்ளுவான்.  மீண்டும் அதைச் செய்யமாட்டான் என நீதிமொழிகள் கூறுகிறது.  கண்டிக்க வேண்டிய இடத்தில கண்டிக்க வேண்டும்.  பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதிருங்கள் என்று பவுலடியார் குறிப்பிடுகிறார்.  எப்பொழுதும் கண்டிப்பவர்களாகவே இருக்கக்கூடாது, பெற்றோரின் அன்பு பிள்ளைகளளைத் தம்மோடு கட்டி இழுக்கும் அளவிற்கு அமைய வேண்டும்.      

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள் 

Comments

  1. பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ஆலோசனைக்காக நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி