மகிழ்ச்சியான வாழ்க்கை


இல்லற வாழ்க்கையில் இன்றியமையாதது எதுவெனில் உரையாடல். உரையாடல் எப்பொழுது தடைபடுகிறதோ, அப்பொழுது வாழ்க்கையில் சந்தேகம், மணமுறிவு போன்றவை ஏற்படும்.

கல்வி கற்ற ஒரு இளம் தம்பதியினர் இருந்தனர். மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்ந்தனர். வெளிநாடு செல்ல மணமகனுக்கு வாய்ப்பு வந்தது. திருமணமான அடுத்த மாதமே வெளிநாடு பறந்து விட்டார். தொலைபேசியில் மட்டுமே இருவரும் பேசிக் கொண்டனர். நாட்கள் செல்லச்  செல்ல பல்வேறு வேலையின் நிமித்தம் கணவன் தொலைபேசியில் பேசுவதை மறந்து விட்டார். மனைவிக்குக் கணவன் மீது ஒரு சரியான புரிந்து கொள்ளுதல் இல்லை. இந்த இடைவெளி மணமுறிவுக்கு வழிவகுத்தது. வெளிநாடு சென்று மகிழ்ச்சியாக வாழ பணம் சம்பாதிக்கப் போய், இறுதியில் பணம் வந்து சேர்ந்தது. மனைவி பறந்து போய்விட்டாள், மகிழ்ச்சி இல்லை. பணம் வாழ்க்கையாகுமா? வாழ்க்கை வாழ மட்டுமே பணம் தேவை!! வாழ்க்கையே பணமாகி விடாது.

சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு இருவரும் பணிக்குச் செல்லும் போது உரையாடல் சில வேளைகளில் முறிந்து விடுகிறது. software கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் ஏறக்குறைய பத்து மணி நேரம் வேலை செய்கின்றனர். சிலர் மூன்று ஷிப்ட் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல். கணவன் வேலைக்குச் செல்லும் போது தான், மனைவி வேலை முடித்து வருகிறார். கணவன் வீட்டிற்கு வரும்போது பிள்ளைகள் வீட்டில் இல்லை. எனவே உரையாடல் என்பது பணி செய்யும் உடன் வேலையாட்களிடம் தான் அதிகம் உள்ளதே தவிர, குடும்பத்தின் அங்கத்தினரிடம் இல்லை.

பொதுவாக யாரிடம் அதிக நேரம் செலவிடுகிறோமோ அவரிடம் தான் வலுவான உறவு ஏற்படுகிறது. எனவே இல்லற வாழ்க்கையில் கலந்துரையாட நேரம் செலவிட வேண்டும்.

கலந்துரையாடல் என்பது மனம் விட்டுப் பேசுவது. சிலர் வீட்டிற்கு வந்தவுடன் TV, Computer, SMS, WhatsApp அனுப்புவது என்று அவைகளில் நேரம் செலவிடுகின்றனர். இது நாளடைவில் நம்மை அடிமையாக்கி குடும்பத்திற்குள்ளான உரையாடல்களைக் குறைத்து விடுகிறது. இது நாம் வேண்டுமென்று செய்வதில்லை. ஆனால் அறியாமலே மாட்டிக் கொள்ளுகிறோம்.

சில வேளை கணவன், மனைவிக்கு இடையேயான உரையாடல் சண்டையைக் கொண்டு வருகிறது. காரணம் மற்றவர் பேசும்போது குற்றம் கண்டுபிடிப்பது அல்லது மற்றவரைக் குறை கூறுவது. இத்தகைய உரையாடலைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முடிந்த அளவு சிரித்துப் பழக வேண்டும். வாழ்வது கொஞ்ச நாள் தான் அதிலும் சண்டையிட்டே வாழ்ந்து வாழ்க்கையை முடிக்க வேண்டுமா? சிரித்துப் பேசிப் பழக முற்பட்டால் துணைவி அல்லது துணைவனின் மனம் மகிழும்.

நாம் சிரித்து வாழப் பழகினால், Take It Easy யாக இருந்தால், மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கொடுத்துவைத்தவர்கள் என்று பொறாமைப்படும் அளவிற்கு மாறிவிடுவோம்.

துன்பங்களை எப்பொழுதும் நினைத்து நினைத்து வாழ்க்கையில் நொந்து கொள்ளாமல், பிரச்சினைகளை மகிழ்ச்சியோடு பேசி எதிர்கொண்டால் உள்ளம் வலுப்படும். உடலிலும் வீணான நோய்கள் வராது. எனவே கலகலப்பான ஆரோக்கியமான மனநிலையோடு வாழ்க்கையை ரசித்துப் பேசிப் பழகுவோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments