திருமண முறிவு பெற்ற பிள்ளைகளும் பெற்றோரும்



பிள்ளைகள் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர்.  ஆனால் திருமண முறிவு பெற்ற பிள்ளைகள் பெற்றோருக்குத் துக்கத்தைக் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர்.  குறிப்பாகத் திருமணம் முறிவு பெற்ற வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகள் பெற்றோருக்குப் பாரத்தைக் கொடுக்கின்றனர்.  

வயதான பெற்றோர்கள் பொது இடத்திற்குப் போகும் போது உங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கின்றார்கள்.  பேரப்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் துளைத்துத் துளைத்துக் கேட்கும் போது பெற்றோருக்கு மிகுந்த வருத்தம் உருவாக்குகிறது.  

பிள்ளைகளின் திருமணம் என்பது பெற்றோருக்கு நிகழ்கால நிம்மதியும், எதிர்காலப் பாதுகாப்பையும் மனதில் கொண்டே நடத்தி வைக்கின்றனர்.  ஆனால் பிள்ளைகள் கணவனையோ அல்லது மனைவியையோ வேண்டாம் என்று உதறிவிட்டு வரும் போது பிள்ளைகளின் தன்னலமும், நிகழ்கால இன்பமும் மேலோங்கி வருகிறது.  இதில் பல பெண்கள் பெற்றோரைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், என் வாழ்வில் நான் தான் முடிவெடுக்க வேண்டியவள் என்று பேச ஆரம்பிக்கும் போது, பெற்றோரின் உள்ளம் உடைந்து வருகிறது.  அவர்கள் பிள்ளைகள் வழியாக எதிர்பார்த்த சந்தோஷம் கண்ணாடி மாளிகையாக உடைந்து நொறுங்கி விடுகிறது.  

ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது சில குறைகள் காணப்படலாம்.  ஒருவரை ஒருவர் சில வேளைகளில் குறைகூறலாம்.  எதிர்பார்த்து வந்த சில காரியங்கள் கிடைக்காமல் இருக்கலாம்.  ஆனால் உடனடியாகத் திருமணம் முடிந்த 10 நாளில் எங்க இருவருக்கும் பொறுத்தமே இல்லை.  நாங்க சேர்ந்து வாழவே முடியாது என்று உடனடியாக முடிவெடுப்பது தவறு.  குறிப்பாகத் திருமணம் முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளுவதற்குக் குறைந்தது 7 வருடங்களாவது ஆகும் என்று குறிப்பிடுகின்றனர்.  ஆனால் இன்று பொறுப்பதற்கு யாருக்கும் மனம் இல்லை.  

திருமணம் முறிவு பெறுவது எளிது.  ஆனால் தொடர்ந்து சந்திக்கப் போகிற பிரச்சனைகள் அதைவிட அதிகம். இரண்டாவது திருமணத்திற்குச் சென்றால், எதோ ஏலம் போகாத ஒரு பொருளை எப்படியாவது தள்ளிவிடுவது போல் இரண்டாவது திருமணம் நடந்து விடுகிறது.  இதில் பெற்றோர் மனம் உடைந்து விடுகிறது.  அப்படி இரண்டாவது திருமணம் நடத்த முடியாவிடில் பெற்றோர் இறுதி வரையிலும் ஒரு திருப்தியில்லாமலே வாழ்ந்து தன் பிள்ளையின் நிலமை மகிழ்ச்சியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் மூச்சை விட்டு விடுகின்றனர்.  

திருமணம் முறிவு பெற்ற பெண் பிள்ளைகள் சரியான வேலைவாய்ப்பு இன்றி, படிப்பறிவு இன்றி இருக்கும் பட்சத்தில் அவர்கள் எதிர்காலம் என்பது வயதான பெற்றோரையே சுற்றி அமைந்து விடுகிறது.  பெற்றோரின் வாழ்க்கைக்குப் பின் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் என்பது மிகுந்த கஷ்டத்திற்குள் மாட்டிக் கொண்டு வருந்துகின்றனர்.  நமது கணவனோடு வாழ்ந்து இருந்தால், இப்படிப் பரிதாபமாக நிற்க வேண்டிய சூழல் இருக்காதே என்று ஏங்குகிற சூழல் ஏற்பட்டுவிடுகிறது.  இப்படி மாட்டிக் கொண்டு மீண்டும் கவுன்சிலிங் பெறுவதற்காக ஒரு பெண் எங்களிடம் வந்தாள்.  ஆண்டவரின் கிருபையால் அந்தக் கணவனும் அவளை ஏற்றுக் கொண்டான்.  இப்பொழுது மகிழ்ச்சியாக வாழ்வின்றனர்.

இப்படிப்பட்ட சூழலை அறிந்த இயேசுவானவர் திருமண முறிவை ஏற்கவே இல்லை என்பதை திருமறையில் மாற்கு. 10:9-இல் கூறுவதைக் காணமுடிகிறது. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ பிரிந்து செல்வது ஆண்டவருடைய திட்டமே இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.  ஆனால் இன்று பலர் திருமண முறிவு தவறு அல்ல என்றும், பொய்யாகத்  தீர்க்கதரிசனங்களைக் கூறுகின்றனர்.  ஆகவே நாம் எச்ச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பெற்றோரின் எதிர்காலம் பிள்ளைகளின் நல் வாழ்வில் தான் இருக்கிறது. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் பிரியமே 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி