பிள்ளைகளின் எதிர்காலம்


குடும்ப வாழ்க்கையில் பிள்ளைகள் மகிழ்ச்சியைக் கொடுக்கவும் செய்கின்றனர். மகிழ்ச்சியை எடுக்கவும் செய்கின்றனர். சிலர் தங்கள் பிள்ளைகளை உயர்வாகக் கருதி அவர்கள் செயல்கள் குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் சிலரோ ஏன் தான் இந்தப் பிள்ளையைப் பெற்றேனோ என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

பிள்ளைகள், குழந்தைகளாக இருக்கும்போது நாம் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பெரியவர்களாக மாற மாற பெற்றோரிடமிருந்து சிறிது சிறிதாக விலகி நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து விடுகின்றனர். 16வயது வரும் போது தானாக முடிவெடுக்கும் நிலையை எட்டுகின்றனர். இதனைப் பெற்றோர் புரிந்து கொள்ளும் மனநிலையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளின் தனித்தன்மையைக் கண்டு பெற்றோர் போற்ற வேண்டும். அதனை நமது செயல்களாலும், பேச்சாலும் வெளிப்படுத்திப் போற்ற வேண்டும். நாம் எதிர்பார்க்கிற குணநலன்கள் தான் அவர்களில் காணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வித குணநலன்கள், எதிர்பார்ப்புகள், விருப்பு வெறுப்புகள் கொண்டவனாக விளங்குகின்றான். எனவே அவர்கள் வருங்காலக் கனவு நம்முடைய எதிர்பார்ப்பிலிருந்து மாறுபடலாம். அதற்காக நாம் வெறுத்து ஒதுக்காமல் அவர்களுடன் உட்கார்ந்து கலந்துரையாட வேண்டும். 

சில வேளைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால கனவைக் கேட்டதும் எரிந்து விழுவர். பெரிய சண்டையே நடக்கும். என்னுடைய கனவில் நீ மண்ணைத் தூவி விட்டாயே என்று வெறுத்து ஒதுக்குகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. நாம் நம்முடைய விருப்பப்படியே அவர்கள் வாழ்க்கையை மாற்றினால் இறுதியில் ஆர்வம் இல்லாமல் வாழ்க்கையை விரயம் செய்வர். அதே வேளையில் பிள்ளைகளுடன் உட்கார்ந்து பேச பெற்றோர் முன்வர வேண்டும். ஒரு இளைஞன் தன் எதிர்க்காலத்தில் IAS முடிக்க வேண்டும் என்று விரும்பித் தன் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினான். ஆனால் அவன் அதற்கென்று சிரத்தை எடுத்துப், பள்ளிப் பருவத்தில் கற்கவில்லை. பலமுறை IAS தேர்வு எழுதிவிட்டுக் காத்திருந்தான். ஆனால் தேறவே இல்லை. காலங்கள் கடந்தாலும் வெற்றி என்பது எட்டாக் கனியாக மாறியது. பெற்றோர் தன் மகனின் திறமையைப் பற்றி அவனோடு பேசாததால் அவன் வாழ்க்கை வீணாகப் போனது. பெற்றோர் பிள்ளையை நம்பி இறுதியில் வறுமையில் மரித்தார்கள்.

பிள்ளைகள் பல வேளைகளில் மற்றவர்கள் பேசுவதை நம்பி தன் திறமையை உணராமல் முடிவெடுப்பர். தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றத் தன்னிடம் திறமை உள்ளதா என்பதைப் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் பேசி, தெளிவை உருவாக்கிக் கொண்டால் பிள்ளைகளின் எதிர்காலத் திட்டம் குறித்து வீட்டில் வீணான பிரச்சினைகள் உருவாகாது.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க எங்களின் facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி