நேரமில்லையே...!


ஆணும் பெண்ணும் பலமணி நேரமாக உழைத்து முன்னேற நினைக்கின்ற வாழ்வில் குடும்பத்தோடு நேரம் செலவிட இயலாத நிலை இருக்கிறது.  குறிப்பாக IT Fieldல் இருக்கும் தம்பதியினருக்கு நேரம் என்பது மிகவும் முக்கியமானது.  தங்களது Project Live-ல் இருக்கும் போது குடும்பத்தையே மறந்து கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகின்றனர்.  வெளிப்பார்வையில் இலட்சக்கணக்காகச் சம்பாதிக்கும் இவர்களில் பலர் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.  

மனைவி, குழந்தைகளோடு நேரம் செலவிடாததால் அவர்களின் தேவைகளை, உணர்வுகளை ஒரு குடும்பத்தலைவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அதேபோன்று தன் பிரச்சினைகளை மனைவியிடம் பகிர்ந்து கொண்டு மனதை இலகுவாக்கவும் இயலவில்லை. எனவே பலர் தற்கொலைக்கு முயல்கின்றனர்.  இதற்கு மிக முக்கியக் காரணம் மன அழுத்தமே.  மனதை இலகுபடுத்துவதற்கான சூழலைக் குடும்பமோ கம்பனியோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

IT Fieldல் இருப்பவர்கள் மட்டுமல்ல குடும்பத்தோடு நேரம் செலவிடாத மருத்துவர்கள், பள்ளிக்கூடம், டியூசன் என்று அலையும் ஆசிரியர்கள், தொழில், பணம் என்று அலையும் வியாபாரிகள், கடைகள் நடத்துவோர், ஊழியம் ஊழியம் என்று வீட்டைக் கண்டு கொள்ளாத ஊழியர்கள், சமூக சேவகர்கள் என்று அனைத்து துறையினரும் அளவிற்கு மிஞ்சித் தங்கள் பணிகளில் நேரத்தைச் செலவிடும்போது குடும்பம் பாதிக்கப்பட்டு விடும்.

டாக்டர் ஒருவர் தன்னலம் கருதாது மக்கள் பணியே மகேசன் பணி என்று வீட்டையே மறந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.  ஆனால் மனைவி இதனை பல முறை சுட்டிக்காட்டி எனக்கும் ஒரு பெட் உங்கள் மருத்துவமனையில் போட்டால் நலமாக இருக்கும் என்றார்.  எதற்கு என்று டாக்டர் கேட்க, Bed போட்டால் அடிக்கடி என்னை வந்து பார்ப்பீர்கள் அல்லவா? என்று பேசினார்.

இப்படிப் பேசியும் டாக்டர் கேட்கவில்லை. நான் உன்னிடம் எவ்வளவு அன்பாயிருக்கிறேன் என்று உருகப் பேசினார். ஒருநாள் மனைவி வீட்டில் இல்லை.  தேடினார் கண்டு பிடிக்க இயலவில்லை.  ஒரு கடிதம் மேசையில் இருந்தது.  அதில் நீங்கள் என்னிடம் அன்பாக இருக்கவில்லை.  என்னிடம் பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை. நான் சென்று வருகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தது.நண்பனை அழைத்தார் மருத்துவர். தன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தன் மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் பார் என்று மனைவியைப் பற்றி எழுதிய பல கவிதைகளை சூட்கேஸில் இருந்து கொட்டினார். தன் நேரத்தைச் செலவிடாத மருத்துவரோடு மனைவி சேர்ந்து வாழ ஆயத்தம் இல்லை.

குடும்பத்தில் பிள்ளைகளோடு நேரம் செலவிடாவிட்டால் பிள்ளைகள் தவறான நண்பர்களுடன் இனைந்து தவறான இடங்களுக்குச் செல்லுவதும், போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் நடக்கும்.

நகையும், பணமும், பொருளும் கொடுத்து, பிள்ளைகளையும், மனைவியையும் மகிழ்ச்சிப்படுத்துவதைக் காட்டிலும் அவர்களோடு நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகின்றனர்.  டி.வி, செல்போன், நெட்வொர்க் போன்றவற்றில் நேரத்தைச் செலவிட்டு மாயையைப் பின்பற்றுவதிலும் உண்மையான அன்பை வெளிக்காட்டி நம் குடும்பத்தை மகிழ்ச்சியாக்குவதே சிறந்தது.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி