குடும்பங்களை குலைக்கும் கடன்


கொரோனா காலங்களில் அநேக குடும்பங்கள் கடன் பாரத்தினால் தவிக்கிறார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார்கள். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடந்த சம்பவம் நமது உள்ளத்தை உலுக்கியது. "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் தற்கொலை"  என்பதற்கு முக்கியமான காரியம் கடன்.

தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்குகிறதற்காக சிறுக சிறுக கடன் வாங்கியுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வட்டியைக் கட்ட முடியாமல் தவித்தார். கொரோனா கால ஊரடங்கு மேலும் நஷ்டத்தை உருவாக்கியது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கவே மூன்று சிறு குழந்தைகளுடன் கணவன், மனைவியும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டனர். கடனால் ஏற்பட்ட மன உளைச்சலைச் சரிசெய்ய ஒரே வழி தற்கொலை என்ற எண்ணம் தான் குடும்பத்தை கவிழ்த்துப்போட்டது.

வறுமை என்பது குடும்பங்களில் மிகுந்த மன உளைச்சலை உருவாக்கிவிடுகிறது. சரியான உடையில்லை, உணவுக்கு வழியில்லை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போதிய பணம் இல்லை, மற்றவர்களைப்போல் ஆடம்பரமாய் வாழமுடியவில்லை என்ற எண்ணம் அதிகம் வர வர மன உளைச்சல் பெருகிக்கொண்டே போகிறது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்வை நாம் உற்றுப்பார்த்தால் இயேசு ஒரு பணக்காரர் இல்லை. வரி கொடுக்க வேண்டிய சூழல் வந்தபோது அவரிடம் பணம் இல்லை. தனக்கென்று பயணம் செய்ய படகு எதுவும் அவரிடம் இல்லாமல் இருந்தது. அநேக வேளைகளில் இயேசு கால்நடையாகவே ஊழியத்தைச் செய்தார். அவரோடு இருந்த சீடர்களும் அநேகர் ஏழைகளாகவே இருந்தார்கள். ஆகவே இயேசுவுக்கு நம்முடைய வறுமை புரியும். நமக்கு உதவிச் செய்ய வல்லவராக இருக்கின்றார். 

கண்ணீரோடு இருக்கிற நம்மைப்பார்த்து கலங்காதே என்று கூறி பெலனையும், தைரியத்தையும் கொடுத்து பிரச்சனைகளை மேற்கொள்ள உதவுவார். தற்கொலை என்பது வறுமையைப் போக்குவதற்கான வழியல்ல. இயேசுவே வழி .

திருமறையில் நன்றாக வாழ்ந்து, பின் எல்லா உடைமைகளையும், பணத்தையும், உறவையும் இழந்து நின்ற யோபு என்ற பக்தனைக்குறித்துப் பார்க்கிறோம். அவன் இறைவனுக்கு பிரியமானவன். ஆனால் இழப்புக்கு மேல் இழப்பு, நஷ்டத்திற்கு மேல் நஷ்டம், எல்லா மதிப்பும், மரியாதையும் இழந்து அவமானம் சூழ்ந்த நிலைக்குத்தள்ளப்பட்டான். பிள்ளைகளை பறிகொடுத்த யோபுக்கு மிஞ்சியது மனைவி மட்டுமே. அவளும் ஒரு நாள் கூறினாள் "நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ஏன் மானம் மரியாதைப் போன பின்பு கடவுள், கடவுள் என்று கூறுகிறீர். கடவுளை தூஷித்து தற்கொலைச் செய்து கொள்ளும் என்று தூண்டுகிறாள். இன்றைக்கு நீங்களும் இப்படிப்பட்ட நிலையில் இருக்கலாம் . 

வாங்கிய கடனை அடைக்க முடியாத உனக்கு எதற்கு வாழ்க்கை, நல்ல சேலை வாங்கித் தர முடியாத உனக்கு எதற்கு திருமணம்? பிள்ளைக்கு நகைப்போட்டுக் கட்டிக்கொடுக்க முடியாத உனக்கு எதற்கு பிள்ளை? படிக்க வைத்து நல்ல கல்லூரியில் சேர்க்க முடியாத என்னை ஏன் பெற்றீர்கள்? நல்ல பைக் வாங்கித்தர  முடியாத உங்களுக்கு நான் ஏன் பிள்ளையாகப் பிறந்தேனோ! இப்படி நீங்கள் கேட்கும் வசையான சொற்கள் உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கிறது அல்லவா 

கலங்காதிருங்கள். யோபு கூறினான் "என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்." அவர் ஏழ்மை நிலையை மாற்ற வல்லவர், இந்த கொடிய நோயை மாற்ற வல்லவர், இந்த இழப்பை சரிக்கட்ட வல்லவர், நஷ்டத்தை லாபமாக மாற்ற வல்லவர். இழந்து போன நன்மைகளைத் திரும்பத் தர வல்லவர் என்ற உறுதி அவனிடம் இருந்தது. ஆகவே நம்பிக்கையோடிருங்கள்.

உங்கள் மனதை அழுத்தும் பாரத்தை நல்ல போதகரிடமோ அல்லது உளவியல் படித்தவர்களிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள். இறைவனிடம் கூறுங்கள் உங்கள் மனம் இலகுவாகும்.

தனிமையாய் இருப்பதை தவிர்த்து, உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர்களிடம் உங்கள் நேரங்களை செலவிடுங்கள்.

வறுமையிலிருந்து விடுதலைப்  பெற தற்கொலை வழியல்ல. மேலான வழியை கர்த்தர் தருவார் என நம்புங்கள். அவர் உங்களை கைவிடமாட்டார்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments