காதுள்ளவன் கேட்காதிருக்கக்கடவன்


புண்ணிய வர்த்தனன் என்ற தகப்பனார் தன் மகளை திருமணம் செய்துக் கொடுத்தார். அவள் மாலை வேளையில் தன் கணவன் வீட்டிற்கு புறப்படும் போது மகள் விசாகையை அழைத்து சில வார்த்தைகளை கூறி அனுப்பினார். "மகளே நீ வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே. அயலார் நெருப்பை வீட்டுக்கு கொண்டு வராதே. கொடுக்கிறவர்களுக்குக் கொடு; கொடாதவர்களுக்குக் கொடாதே. கொடுக்கிறவர்களுக்கும் கொடாதவர்களுக்கும் கொடு. நகைத்துக் கொண்டு உட்காரு. நகைத்துக் கொண்டு சாப்பிடு. நகைத்துக் கொண்டு தூங்கு. எரி ஓம்பு."

இதைக்கேட்ட அவரின் மகள் மனதார தன் தந்தையிடம் அப்படியே நடப்பேன் அப்பா என்று தலையை அசைத்தாள். மற்றவர்களுக்கு இது புரியாமல் ஏதோ உளத்துகிறார் என்று சிரித்தனர். பின்னர் விசாகையிடம் உன் தந்தை என்னக் கூறினார் என்று கேட்டனர். அப்பொழுது அவள், வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடாதே என்றால் வீட்டில் உள்ள குறைகளை மற்றவர்களிடம் கூறாதே என்றும் அயலார் நெருப்பை வீட்டிற்கு கொண்டு வராதே என்றால் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி வெளியில் உள்ள மக்கள் கூறும் குறைகளை வீட்டில் வந்துப் பேசாமல் அதை விட்டு விடு என்றும், கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு என்றால் யாராவது இரவலாக வீட்டில் உள்ள பொருளைக்கேட்டால் அதை திருப்பிக் கொடுக்கிறவர்களுக்கு மட்டும் கொடு என்று அர்த்தம். எரி ஓம்பு என்றால் அத்தை, மாமாவை தீச்சுடர் போன்று எண்ணி நடந்துக்கொள் என்று அர்த்தம். நகைத்துக் கொண்டு தூங்கு என்றால் மற்றவர்கள் தூங்கிய பின் தூங்கு என்றும் பொருள் என்று விளக்கம் கூறினாள். இக்கதையை வெ.இறையன்பு IAS அவர்கள் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். இக்கதையில் உள்ள தந்தையின் ஆலோசனை இன்றைக்கும் நடைமுறைப்படுத்த வேண்டியவை என்பதை நாம் உணரமுடிகிறது.

திருமணமானவுடன் தன் கணவன் குடும்பத்தைப் பற்றி ஆராய்வதும், குறைகளை கண்டுபிடித்து தன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொள்வதும் அவசியமற்ற ஒன்றாகும். யாராவது தன் தலை மீதே மண்ணை வாரிப் போடுவோமோ? இல்லையே! ஆனால் நம் செயல்கள் பல வேளை அப்படித்தான் அமைந்து விடுகிறது.

அதேப் போன்று பிறர் தன் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி கூறும் குற்றகளை மனதில் வைத்துக் கொண்டு தவறாக judge பண்ணிக் கொண்டு நடப்பதும், சூழல்கள் வரும் போது அவைகளை அனைவருக்கும் முன்பு பேசி சண்டை பிடிப்பதும் அவசியமற்ற செயல் என்பதை புத்தர் காலத்திலே உருவான இக்கதை கூறுகிறது.

இன்றைக்கு பல குடும்பங்களின் சண்டைக்கு இந்த இரண்டும் முக்கிய காரணங்கள் என்பதை மறந்து விடக்கூடாது. புறங்கூறித் திரியாதே  என்று திருமறைக் கூறுகிறது. கிழவிகளின் பேச்சுக்கு காதுக் கொடுக்கக் கூடாது என்று பவுலடிகள் குறிப்பிடுகிறார். தவறான அபிப்பிராயங்கள், தவறான தகவல்கள் குடும்பங்களை எப்பொழுதும் சின்னாபின்னமாக்கிவிடும்.

மூன்றாவது நபர் நம்மிடம் இல்லையென்றால் அவரைப் பற்றிப் பேசுவது சரியல்ல என்ற உணர்வு நமக்கு வர வேண்டும் இல்லையென்றால் யாராவது தவறான காரியங்களை நம்மிடம் கூறும்போது, நீங்கள் சொல்வது உண்மையா என்பதைக் கேட்கட்டுமா என்றுக் கேளுங்கள். அவர்கள் ஓடி விடுவார்கள். ஏனென்றால் சிலருடைய வேலையே அடுத்தவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை எப்படி குலைத்து விடலாம் என்பதே.

இந்த பொல்லாத உலகத்தில் காதுள்ளவர்கள் இப்படிப்பட்ட காரியங்களைப் பற்றிக் கேளாமலும், பேசாமல் இருப்பதும் மேன்மையானது. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments