ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு


தினசரி பத்திரிகையில் அடிக்கடி இடம் பிடிக்கிற ஒரு செய்தி "தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளுதல்" (தற்கொலை) சிறு பிரச்சனையோ பெரிய பிரச்சனையோ அதற்கு முடிவு எடுக்க நேரம் கொடுக்காமல் இனி வாழ முடியாது என்ற முடிவுக்கு வருவதால் தற்கொலை செய்துக்கொள்ளுகின்றனர். பெரிய பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளுகிற மக்கள் கூட அவைகளை பொறுமையோடு கையாளும்போது, ஒன்றுமில்லாத காரியங்களுக்கு தற்கொலையை சிலர் தெரிவுச்செய்து விடுகின்றனர். குறிப்பாக குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறிய சண்டைகளுக்கும் முடிவு தற்கொலை என்று நினைக்கின்றனர். 

இதனை எழுதும் போது என்னுடைய மேசையிலே உள்ள தினசரிப் பத்திரிக்கை இவ்வாறு கண்ணீர் வடிக்கிறது. "இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை" திருமணமாகி 5 வருடங்கள் தான் உருண்டோடியுள்ளது . இரு குழந்தைகள் உள்ளனர் . தன் சகோதரன் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதைப்  பார்க்க விரும்பியுள்ளார். ஆனால் கணவன் அனுமதிக்கவில்லை. உடனே வாக்குவாதம் வளர்நது  தீக்குளித்து இறந்துள்ளார். குழந்தைகள் பரிதாபமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

சிறு பிரச்சனைகளையும் பெரிய, தீர்க்க முடியாத பிரச்சனையாகவும், யாராலும் இனி தீர்க்கவே முடியாது என்று எண்ணுவதாலும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்துவிடுகின்றனர் . 

திருமறையிலும் சவுல் தன்னுடைய படைவீரர்கள் தோற்றுப்போனதை  அறிந்து தன்னுடைய பட்டயத்தை நட்டு அதின் மேல் விழுந்து சாக நினைத்தான் . (1 சாமுவேல் 31:4) இங்கே நம்பிக்கையின்மை சவுலின் வாழ்வில் மேலோங்கியது. தனக்கு ஏற்பட்ட தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை. இனி தனக்கு எப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்குமோ என்று யோசித்தவன் தன்னையே மாய்த்துக்கொள்ளுகிறான். இன்றும் பலர் கடன்களை வாங்கி விட்டு அடைக்க முயன்றும் முடியாதபோது, அவமானம், தொடர் தொந்தரவு வரும்போது சகித்துக்கொள்ள முடியாமல், நம்பிக்கையை இழப்பதால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். ஆனால் இறைவன் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை வழங்கும் தெய்வமாக இருக்கிறார் .  

திருமறையில் காணும் மற்றொரு உதாரணம் "அகித்தோப்பேல் தன் யோசனையின் படி நடக்கவில்லை என்று கண்டபோது ... நான்று கொண்டு செத்தான்" (2 சாமுவேல் 17:23) தான் சொன்னபடிதான் குடும்பத்தில் நடக்கவேண்டும் என்று கணவனோ/மனைவியோ பிடிவாதம் பிடிக்கும்போது, அது நடைபெறாவிட்டால் தற்கொலைச் செய்து கொள்ளுகின்றனர். சிறு பிள்ளைகளாய் இருக்கும்போது தங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து, கீழே உருண்டு வாங்கிப்பழகினவர்கள் திருமணமானபோதும் அடம்பிடித்து தான் கூறியதை சாதிக்க விரும்புவர். ஆனால் சாதிக்கமுடியாத போது அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எனவே திருமண முறிவுக்கு அல்லது தற்கொலைக்கு சென்றுவிடுகின்றனர் .

இயேசுவைக் காட்டிக்கொடுத்த  யூதாஸ் "குற்றமில்லாத இரத்தத்தைத் நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்... நான்று கொண்டு செத்தான்" (மத்தேயு 27-4,5) இங்கே குற்ற உணர்வின் நிமித்தமாக தற்கொலை நடைபெறுகிறது. தான் செய்த தவறு மிகவும் மோசமானது. இதற்கு மன்னிப்பே கிடையாது என்ற சிந்தனை ஒரு மனிதனுக்கு ஏற்படும்போது தவறான முடிவுகளை எடுத்துக்கொள்ளுகிறான். குடும்பவாழ்விலும் கணவன்/மனைவி மற்றவர்களுக்கு விரோதமாக தீவிரமாக செயல்படுவர். பின் நாளில் அவர்களுடைய உண்மை நிலையை உணர்ந்து தன்னுடைய தவறுக்காக வருத்தப்படுவர். சில வேளை கணவனோ / மனைவியோ தன் நிமித்தமாக இறந்துவிட்டால் தன் தவறை உணர்ந்து தங்களை தாங்களே மாய்த்துக்கொள்ளுகின்றனர் .

பேதுருவும் யூதாசுக்கு இணையாக மறுதலித்தான். ஆனால் தன் தவறை உணர்ந்து மனங்கசந்து அழுதான். குற்ற உணர்விலிருந்து வெளியேவந்து எந்த இயேசுவை மறுதலித்தானோ அந்த இயேசுவுக்காக தன் உயிரைக்கொடுக்கவும் முன் வந்தான். ஏனெனில் மனிதன் தன்னை மாய்த்துக்கொள்வது இறைவனின் திட்டமல்ல. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு கூறுகிறார்.

எந்த பிரச்சனைகள் வந்தாலும், தாங்க முடியாத, தீர்க்கமுடியாத நிலை நம்மை சூழ்ந்துகொண்டாலும், அவமானத்தால் நாம் விழிபிதுங்கி நின்றாலும் இயேசுவின் கரம் நம்மை தொட்டு கலங்காதே, திகையாதே நான் உன்னோடே இருக்கிறேன் என்று தேற்றுகிறார் . அவரிடம் வருவோம், வாழ்வு பெறுவோம் .

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

உண்மையை உரக்க சொல்வோம்

உண்மையை மூலதனமாக்கு

தேன் தடவிய வார்த்தைகள்