வெளுத்ததெல்லாம் பால் அல்ல


ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக காலையிலே பயணப்பட்டுப் போய்க்கொண்டிருந்தோம். காலை உணவிற்காக ஒரு உணவகத்தில் நுழைந்தோம். உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது அங்குள்ள பணியாள் மிகவும் அன்போடு என்ன வேண்டும், என்ன வேண்டும் என்று விழுந்து விழுந்து கவனித்தார். என் அருகில் இருந்த நண்பர் எங்களைப் பார்த்து கூறினார். என் மனைவி கூட இப்படி அன்பாக அருகில் நின்றுக் கொண்டு திரும்ப திரும்ப கேட்கமாட்டாளே, இது எவ்வளவு பரவாயில்ல என்றார்.

மேலேக்கூறிய அவர் கூற்று உண்மை தான் ஆகவே மனைவியைக் காட்டிலும் உணவகத்தின் பணியாள் மிகவும் அன்பு கூர்ந்து செயல்படுகிறார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?. என் மனைவியைக்காட்டிலும், கணவனைக் காட்டிலும் என்னோடு பணிபுரியும் நபர் மிகுந்த அக்கரைச் செலுத்துகிறார் என்று நினைத்து கணவன் சரியில்லை, மனைவி சரியில்லை என்று அலுவலகத்திலே  நமது நேரத்தைப் போக்கலாமோ!

நமக்கு கீழே பணிபுரியும் நபர் நம்மிடம் ஏதோ ஒரு நன்மையைப் பெறுவதற்காகவே எவ்வளவு ஆசைவார்த்தைகளால் நமது உள்ளத்தைக் கவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த இனிமையான வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வருபவை அல்ல, வெறும் நாக்கிலிருந்து வெளிப்படுபவைகளே என்பதை மறந்து விடக் கூடாது.

நீங்கள் பணியில் மும்முரமாய் இருக்கும் பொது உங்கள் மனைவி அடிக்கடிப் போன் செய்து நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், வீட்டிற்கு சீக்கிரம் வரக்கூடாதா, வெளியே போகவேண்டும் என்று சொன்னோம் அல்லவா என்று தொந்தரவுச் செய்வதற்கும், நாம் பணிச்செய்துக் கொண்டிருக்கும் போது sorry sir என்று தாழ்மையோடு, பணிவோடு தொந்தரவுச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மனைவியின் தொந்தரவைத் தலை வலியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது அன்பின் தொல்லை, உரிமையுடன் தொல்லைச்செய்வது. அவர்களுக்கு நம்மை விட்டால் வேறு ஒரு கணவன் இல்லை ஆனால் நமது பணியாளுக்கு நாம் அந்த இருக்கையில் இல்லாவிட்டால் மற்றொரு நபர். நம்மிடம் காட்டிய அதே பணிவுத் தொடரும்.  நம் மனைவிக்கோ, கணவனுக்கோ அப்படி இல்லை.

கீழே நான் தருகிற உதாரணம் சற்று மனதிற்கு வலியைத் தருகிற உதாரணம் தான், இருப்பினும் என் கருத்தை உங்கள் உள்ளங்களில் பதிய வைப்பதற்காகவே! பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள்  தங்களிடம் வருகிறவர்களிடம் மிகவும் அன்பான வார்த்தைகளாகவே பேசி மனதைக்  கவருகிறார்கள்.  ஆனால் மனைவிமார் அப்படிப் பேசுவதில்லை.  எனவே மனைவியைக் காட்டிலும், விலை மாது அதிக அன்பு செலுத்துகிறாள் என்று எடுத்துக் கொள்ள இயலுமோ. 'உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக' என்று திருமறைக் கூறுகிறதே. மாய்மாலமான அன்புக்கும், உண்மையான அன்பிற்கும் வித்தியாசத்தை உணர்ந்தால் தான் வாழ்க்கை தடம்புரளாமல் இருக்கும்.

மாத்திரைகளில் இனிப்பு தடவப்பட்டிருக்கும். எனவே இனிக்கிறது என்று மாத்திரையை கடித்து சாப்பிட முயன்றால் பயங்கர கசப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த உண்மையை எழுதும் போது என் கையில் தினசரி நாளேடு ஓன்று ஒரு செய்தியை சுமந்துக்கொண்டு நிற்கிறது. "இரண்டாவது கணவர் கொன்று வீட்டில் புதைப்பு. கைதான இளம்பெண்" இந்த சம்பவங்களுக்கெல்லாம் அடிப்படையான காரணம் இனிமையாக பேசுபவர், இனிமையாக பழகுபவர் என்று வாழ்க்கையில் தடம் புரளும் போது கிடைக்கும் முடிவு பரிதாபமானது. 

ஆகவே நமது மனைவியின், கணவனின் கடினமான வார்த்தைகளுக்குள்ளேயும் அக்கறை உண்டு, அன்பு உண்டு, பாசம் உண்டு உயிரையே கொடுக்கும் அளவிற்கு நேசம் உண்டு. ஆனால் அவைகளை வெளிப்படுத்துவதிலேத் தான் தடுமாற்றம். இதை உணர்ந்து கணவன், மனைவியின் தொந்தரவை அன்புத் தொந்தரவாக எடுத்துக் கொண்டு இன்புற்று வாழ்வோம்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி