உள்ளங்களை வெல்லும் வார்த்தை


இங்கர்சால்  கூடுகை ஒன்றில் உரையாற்றுவதற்காக எழுந்து நின்ற போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதன் எழுந்து வந்து அவரிடம் ஒரு சிறிய பேப்பர் ஒன்றை கொடுத்துச் சென்றான். அவர் அதனை விரித்துப் பார்த்தார். அதில் "இன்றைக்கு சொற்பொழிவை முடிக்கும் முன் நீ உயிருடன் இருக்கப்போவதில்லை" என்று எழுதியிருந்தான். அதனை மடித்து வைத்து விட்டு தன் சொற்பொழிவை ஆரம்பித்தார்.

பேப்பரைக் கொடுத்தவன் மூன்றாவது வரிசையில் உட்கார்ந்துக் கொண்டு தன் பையிலிருந்த துப்பாக்கியை அடிக்கடி தொட்டு தொட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். மூடத்தனங்களை எதிர்த்ததால் இங்கர்சாலைக் கொன்று விட வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தான்.

"இங்கர்சாலோ மிகவும் தெளிவாக தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்துக் கொண்டே இருந்தார். நேரம் செல்ல செல்ல இங்கர்சாலின் வார்த்தைகள் அவன் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. இறுதி வரை அவனால் இங்கர்சாலைச் சுடவே முடியவில்லை. சொற்பொழிவு முடிந்த பின் இங்கர்சாலை சந்தித்து தன்னை மன்னிக்கும் படிக் கேட்டுக் கொண்டான்.

இன்று குடும்பங்களில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகளை உற்றுப்பார்த்தால் சண்டைகளுக்கான காரணமே வார்த்தைகள் தான். திருமறை, சொற்களைப் பற்றி எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறது. "சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்" (நீதி 10:19) குடும்பத்தில் தேவையில்லாமல் கோபத்தின் மிகுதியால் பேசும் போது மற்றவர்களை காயப்படுத்த ஆரம்பித்து விடுகிறோம். அச்சூழலில் பேசாமல் இருப்பது அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேறுவது சாலசிறந்தது.

"நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்.துன்மார்க்கருடைய வாயோ மாறுபட்டுள்ளது" (நீதி 10:32). இன்று கணவன், மனைவியின் வார்த்தைகள் பிறருக்கு பிரியமானவைகளைப் பேசுகிறதா? அல்லது பிறரை காயப்படுத்தி, குற்றப்படுத்திப் பேசுகிறதா?

"மதிக்கெட்டவன் பிறனை அவமதிக்கிறான், புத்திமானோ தன் வாயை அடக்கிக் கொண்டிருக்கிறான்"(நீதி 11:12). இன்று கணவன், மனைவி ஒவ்வொருவரும் பிறரை அவமதிப்பதும் அடுத்தவர் குடும்பத்தை அவமரியாதையுடன் பேசுவதும், நடத்துவதும் அல்லவோ பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக உள்ளது!

"பட்டையக் குத்துக்கள் போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம் " (நீதி 12:18) இன்று பிறரைப்பற்றிக் குத்தி குத்திப் பேசுவதில் தான் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி: நமது நாவு எப்பொழுதும்  பிறரை ஆற்றுவதாக, ஆறுதல்படுத்துவதாக அமைகிறதோ அப்பொழுது குடும்பம் மகிழ்ச்சிக்குள்ளாகும்

"தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்: தன் உதடுகளை விரிவாய் திறக்கிறவனோ/ளோ கலக்கமடைவான்/ள்" (நீதி 13:3). ஒருவர் தன் வாயை, நாவைக் காத்துக்கொண்டால் குடும்ப உறவைக் காத்துக் கொள்ளலாம். இதைப் போன்று நீதிமொழிகள் புத்தகத்தை மட்டுமே நீங்கள் திரும்ப திரும்ப வாசித்துப்பாருங்கள் நாவைப்பற்றி, வாயைப்பற்றி, வார்த்தையைப் பற்றி குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் உங்களைப் பொறுத்திப் பாருங்கள்.உங்கள் வாழ்க்கையிலே புதுப்பொலிவு உண்டாக ஆரம்பிக்கும்.

வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாழ்வை  கட்டுவதாக அமைய வேண்டுமேயொழிய, வாழ்வை வீழ்த்துவதாக அமையக் கூடாது. வார்த்தையால் வீழ்ந்த குடும்பங்களை பார்த்து புத்தியோடு பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் வார்த்தைகளே வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஆகவே நம் வார்த்தைகளில் கவனம் வைக்க வேண்டும். நம் வார்த்தைகள் மணம் வீசினால் வாழ்க்கையும் மணம் வீச ஆரம்பிக்கும்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற  

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க  இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Post a Comment

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி