மன்னிப்பில்லாமல் எதிர்காலம் இல்லை


மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராயர் டெஸ்மன்ட் குட்டு ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். இப்புத்தகம் பலருடைய வாழ்வை தொட்டது. பல பரிசுகளையும் பெற்றது. அப்படி என்னதான் அப்புத்தகத்தில் எழுத அவரைத் தூண்டியது? காரணம் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வெளியே வந்தவர் நெல்சன் மண்டேலா. அவர் அதிபர் ஆனவுடன் இனவெறியராயிருந்த  வெள்ளையர்களை கடுமையாக ஒடுக்குவார் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவரோ அமைதியையும் ஒப்புரவையும் அறிவித்தார். சமாதானத்திற்கான ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி பேராயர் டெஸ்மன்ட் குட்டுவை அதற்கு தலைமை பொறுப்பு ஏற்க வைத்தார்.

இதன் வழியாக தவறு செய்தவர்கள் நேரடியாக வந்து தங்கள் தவறுகளை அறிக்கையிடவும், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை மன்னிக்கவும் ஏற்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த மன்னிப்பு மற்றும்  ஏற்றுக்கொள்ளுதல் நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்து தான் “மன்னிப்பில்லாமல் எதிர்காலம் இல்லை” என்ற புத்தகத்தை எழுதினார்.

குடும்ப வாழ்விலும் பிரச்சனைகள் வரும்போது யார் முதலில் மன்னிப்பது? யார் முதலாவது மற்றவர்களிடம் பேசுவது? நான் முதலாவது பேசினால் நான் தவறு செய்தது போல் மாறி விடாதா? நான் கணவனை / மனைவியை இப்படி மன்னித்துக்கொண்டே சென்றால் அவர்கள் நமக்கு செய்யும் தீங்கு தொடராதா? என்ற கேள்விகளை அடுக்கடுக்காக சிந்தித்து பேசாமலே, மன்னிக்காமலே செல்வதால் பிரச்சனைகள் என்பது குறைவதற்கு பதிலாக வளர்ந்து கொண்டேக்செல்லுகிறது.

ஒருவர் மீது மற்றவர்களுக்கு கசப்பு உணர்வு வரும்போது அதை உடனே சரியான சமயத்தில் பேசி சரி செய்து கொள்ள வேண்டும். மாறாக மனதில் வைத்துக் கொண்டு பேசாமல், அதை நினைத்து நினைத்து பெரிதாக்கினால் பிரச்சினை தீர்க்க முடியாதது போல தோன்றிவிடும்.

குடும்ப பிரச்சனையில் யார் முதலில் மன்னிக்க வேண்டும்? பேச வேண்டும் என்பதற்கு இயேசுவானவரே நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கின்றார். பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் (லூக்கா 23:34) என்று இயேசுவானவர் கூறுகிறார். தவறு செய்கிறவர்களை பார்த்து நாம் அவன்/ள் வேண்டுமென்று தான் இதை செய்கிறான்/ள்  என்று கூறுவோம் அல்லது சாதிப்போம். ஆனால் இயேசுவுக்கு தெரியும் தன்னை பொறாமையினால் கொலை செய்ய தூண்டிய யூதத்தலைவர்களையும், குற்றம் ஒன்றும் இவரில் காணவில்லை என்று கூறி மரண தண்டனை வழங்கிய பிலாத்துவின் செயலையும் அவர் நன்கு அறிவார். ஆனால் இயேசுவின் மனநிலையானது ஒரு தாயைப் போன்று தந்தையைப் போன்று காணப்பட்டது. நமது பிள்ளைகள் தவறு செய்து விட்டால், சரி தெரியாமல் செய்து விட்டான் விடுங்க, அதை பெரிசா நான் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை என்று விட்டு விடுவது போல் காணப்படுகிறது.

அதேவேளையில் இயேசுவிடம் தவறு செய்தவர்கள் தங்கள் தவறுக்காக வருந்தினார்களா? இல்லையென்றால் என்னை மன்னித்து விடும் என்று தவறு செய்தவர்கள் கேட்டார்களா? அதுவும் இல்லை. ஆனால் கேட்காமலே இயேசு பேசுகிறார். அவர்கள் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் இயேசுவிடம் மன்னிக்கும் குணம் இருந்தது. எனவே அவர் மன்னித்து விட்டார். தவறுக்காக அவர்கள் வருத்தப்பட்டாலும் வருத்தப்படா விட்டாலும் அதனை வழங்கிவிட்டார்.

துன்பப்பட்டவர் தானாகவே முன்வந்து பேசுகிறார், மன்னிக்கிறார் என்றால் நமது குடும்ப வாழ்வில் இந்த முன்மாதிரியை நாம் பின்பற்றுவது அவசியமல்லவா.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments