வறண்டு போன வாழ்வு



இரவு வேளையில் திடீரென்று “ஓ ஓ” என்று சத்தம் கேட்கும், சற்றுநேரத்தில் விசில் பறக்கும். யார் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்? இரவு வேளையில் ஊரே  தூங்கிக் கொண்டிருக்கும்போது யார் இப்படி விழித்திருந்து சத்தமிடுவது? திகைத்துப் போனான் டேவிட். புதிதாக வேலை நிமித்தமாக நகரத்துக்கு வந்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சற்று மெதுவாக ஜன்னல் வழியாக உற்றுப்பார்த்தால், வாட்டசாட்டமான இளைஞர்கள் மூவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்குள் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஓடிக்கொண்டிருந்து இது நடுநிசி என்பது அவர்களுக்கு மறந்துபோனது. சற்று நேரம் அமைதி, தொடர்ந்து விசில், ஓ ஓ என்ற சத்தம்  தெருமக்களுக்கு காதுகளைக் கிழிக்கும் வண்ணம் வந்துக்கொண்டே இருந்தது. 

பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள் வெகுண்டு எழுந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவல் வண்டி வந்து சேர்ந்தது. நடு இரவில்  பஞ்சாயத்து. டேவிட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. காலையில் எழுந்தவுடன் அருகிலுள்ள வீட்டுக்காரரிடம் மெதுவாக நேற்று நடந்த சம்பவம் குறித்து கேட்டபோது பகீர் என்று இருந்தது.

இதுவெல்லாம் சகஜம் சார். என்னச்சொல்லுவது. எங்க ஊரை குறிவச்சே கஞ்சாவை விற்கிறாங்க. இதுல இப்படி இளைஞர்கள், புதிதாக திருமணமானவர்கள் என்று அநேக இளைஞர்கள் மாட்டிக் கொள்ளுகின்றனர். கஞ்சாவினால்  ஏற்படும் உற்சாகத்தில் எது இரவு, எது பகல் என்று கூடத்தெரியாமல் இப்படி தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். கடைசியா போலீஸ் வந்தால்தான் இவனுங்க அமைதியாவாங்க என்றார்.

சரி சார், இவங்களுக்கு திருமணம் ஆகியிருக்கும்லா, வீட்டுக்காரங்க எப்படி? ஒன்னும் சொல்ல மாட்டாங்களா என்றார் டேவிட் .

அது ஏன் கேக்குறீங்க, எல்லாருக்கும் திருமணமாயிட்டு, ஆனா ஒருத்தருடனும் மனைவி இல்லை. இவங்க பண்ணுகிற டார்ச்சர் தாங்க முடியாம கொஞ்ச நாளிலேயே சொந்த வீட்டுக்குப் போயிடுறாங்க. பெற்றோர் எத்தனை முறை சேர்த்து வைத்தாலும் இவனுங்க கஞ்சாவுக்கு பழகி போனதினால், பொண்டாட்டிமார அடி அடின்னு அடிக்கிறதும், சந்தேகப்பட்டு விரட்டுகிறதுமே இவனுங்க பழக்கமாயிட்டு. ஒரு மனைவி வேண்டான்னு விரட்டி விட்டுவிட்டு அடுத்தது, பின் அடுத்தது என்று போய்கிட்டு தான் இருக்கு. என்ன செய்கிறது கஞ்சாவுக்கு அடிமையானதால வாழ்க்கையை தொலைச்சிடுறாங்க என்று வருந்தினார்.

இன்றைக்கு போதைக்கு அடிமையாய் வாழ்கிற கணவர் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இன்று பல கெட்ட நண்பர்களின் தூண்டுதலினால் பல திருமணமான ஆண்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.  பலர் ஏன் கஞ்சா பயன்படுத்துகிறாய் என்றால் குடும்பத்தில் ஒரே பிரச்சனை, மனைவி சரியில்லை, சரியான வேலை இல்லை, யாரும் என்னை மதிப்பதில்லை, என்னை வீட்டில் உள்ளவர்கள் ஏமாற்றி என் சொத்தை பறித்துக்  கொண்டார்கள் என்று மனதின் தப்பிக்கும் முயற்சியாக (escape mechanism) கஞ்சாவை காரணம் காட்டுவார்கள்

கஞ்சாவை இரவு வேளைகளில் இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களுக்குள் போதை வெறி ஏறி கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருகிறது, அதனால் விசில் பறக்கிறது தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு பைத்தியகார நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதன் வழியாக பொறுப்பற்ற நடக்கைகள் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் நாளடைவில் கஞ்சா இல்லாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. எனவே மனைவியிடம் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றையும் ஏமாற்றி வாங்கிக் கொள்கின்றனர். கொடுக்காவிட்டால் அடித்து உதைக்கவும் செய்கின்றனர்.

அதேவேளையில் மனைவியை சந்தேகிக்கிற குணமும் வளர்ந்து விடுகிறது. ஆகவே பெண்களை கூண்டு பறவையாக மாற்றி விடுகின்றனர். யாரிடமும் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவர். ஆனால் இவர்கள் மனைவியிடமும் அதிகமாக பேசுவது இல்லை. தாங்கள் மட்டும் தனியாக இருந்தாலே போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மனைவி மீதும் பிள்ளைகள் மீதும் எப்பொழுதும் எரிந்து விழுகிறவர்களாக மாறிப் போகின்றனர்.

ஒருவர் இப்படிப்பட்ட குடும்பச் சூழலில் அகப்பட்டு கொண்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க வேண்டியது அவசியம். அதோடு (counselling) ஆற்றுப்படுத்துகிறவர்களையும் அணுகி நலம் பெற முற்பட வேண்டும்.

அதோடு இணைந்து மனைவியர் இதுபோன்ற சூழலில் மாட்டிக்கொண்ட தங்கள் கணவன்மாரின் மீது அன்பையும் கருணையையும் காட்டி அவர் ஒரு நோயாளி என்ற உணர்வுடன் அணுக வேண்டும். இறைவன் எத்தனை மக்களை அவர்களின் பாவத்திலிருந்து விடுதலையாக்கியுள்ளார் என்பதை திருமறையில் வாசிக்கிறோம்.  இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் உலகத்தில் வந்தார்  (லூக்கா 19:10) என்பதை உணர்ந்து ஆண்டவரிடம் ஒப்படையுங்கள். அவர் நிச்சயமாகவே விடுதலையாக்குவார்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி