X-Ray கண்கள்



மதிவண்ணன் டெல்லி பட்டணத்திலே நல்ல வேலைப் பார்த்து வந்தான். வயதான பெற்றோர்கள் சொந்த கிராமத்திலே வசித்து வந்ததால் தன் இளவயதின் மனைவியை ஊரிலேயே விட்டுச் சென்றான். தன்னுடைய மனைவி வங்கி ஒன்றில் வேலைச் செய்வதால் குடும்பத்திற்கு நல்ல வருமானம் வந்தது. மதி அடிக்கடி ஊருக்கு வந்துச் செல்வான். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. கார், பங்களா என்று கிராமத்திலேயே உயர்ந்து நின்றது அவனது குடும்பம்.

செல்போனில் அடிக்கடி தன் மனைவியிடம் பேசிக்கொள்ளுவான். சிலவேளைகளில் அவன் பேசும்போது பிஸி பிஸி என்று வந்து விடும். இதனால் அடிக்கடி எரிச்சல் அடைய ஆரம்பித்தான் மதி. நம்மை விட முக்கியமான ஆள் யார்? யாரிடம் இவ்வளவு நேரமாக பேசிக் கொண்டு இருக்கிறாள்? மெதுவாக சந்தேகக் கோடு வாழ்க்கையில் படர ஆரம்பித்தது.

ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவியின் செல்போனை thoroughவாக செக்பண்ண ஆரம்பித்தான். துவக்கத்தில் மனைவிக்கு புரியவில்லை.  போகப்போக சந்தேகக் கொடு சந்தோசக் கேடாக மாற ஆரம்பித்தது.

தன் மனைவி யாரிடம் பேசுகிறாள்? எவ்வளவு நேரம் பேசுகிறாள்? எப்பொழுதுப் பேசுகிறாள்? சிரித்து சிரித்துப் பேசுகிறாளா? என வீட்டுக்கு அருகாமையில் உள்ளவர்கள் மூலம் டெல்லியிலிருந்து செக் பண்ண ஆரம்பித்தான். குடும்பத்தில் குழப்பம் ஆரம்பித்து அடி,தடியாக மாறி, கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது.

சந்தேகம் என்பது குடும்பங்களை சீர்குலைத்து விடுகிற ஓன்று.  கணவன், மனைவி உறவில் மட்டுமல்ல. எல்லா உறவுகளிலேயும் சிக்கலை உருவாக்ககூடியது என்பதை திருமறை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

சவுல் அரசன் தாவீதை சந்தேகக்கண்ணோடே நடத்தினதை பார்க்கலாம்.  "அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார் (1சாமு 18:9) (“Saul never again trusted David”). தன்னுடைய பதவியை தாவீது எடுத்துவிடக் கூடாது என்று எண்ணி பல்வேறு விதங்களில் தாவீதைக் கொல்வதற்கு திட்டமிடுகிறான். எப்படியாவது பெலிஸ்தர் கையில் மாட்டி சாகவேண்டும் என்று தந்திரங்களை செய்தான். இன்றும் சந்தேகம் கொள்ளுகிறவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவி இறந்தால் நல்லது என்ற அளவிற்கு சென்று விடுகின்றனர்.

சவுலின் இராஜ்யத்தை எடுத்துக்கொள்ளும் எண்ணம் தாவீதுக்கு இல்லை.  ஆனால் இவனாகவே தன் உள்ளத்திற்குள் யோசித்து, யோசித்து ஒரு மன நோயாளியாகவே மாறிப் போகிறான். எனவே வீட்டிற்குள்ளேயே புலம்பிக்கொண்டிருக்கிறான். இவ்வாறுதான் சந்தேகம் கொள்ளுகிறவர்கள் ஒரு மன நோயாளியாகவே மாறிப்போகின்றனர். எப்பொழுதுபார்த்தாலும் என் மனைவி/கணவன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறானோ/ளோ? யாரிடம் தவறாக நடக்கிறாளோ நான் வேலைக்கு வந்துவிட்டேனே என்று புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். சிலர் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்ய முடியாமல் திடீரென்று வேலையை பாதியிலே விட்டு விட்டு வீட்டிற்கு சென்று மனைவியை பார்க்க சென்று விடுகின்றனர். இதனுடைய உச்சக்கட்டம் மனைவி வேலைக்குச் செல்வதை நிறுத்துவது அல்லது வீட்டிற்குள்ளே வைத்து பூட்டிவிட்டுச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி விடுகின்றனர். சிலர் தன்னுடைய மனைவி/கணவனின் செல்போனை தங்கள் போன் மூலம் கண்காணிப்பது போன்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

சவுல் தாவீதை எப்பொழுதும் கண்காணிக்கிறவனாக இருந்தான்.  தாவீது எங்கே இருக்கிறான் என ஆள்களை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினான். வாழ்நாளில் அநேக நாட்களை தாவீதை தொடர்வதிலேயே காலத்தைக் கழித்தான். சந்தேகம் என்பது மற்றவர்களை கண்காணிக்கும் செயலுக்குக் கொண்டுச் செல்லுகிறது. இது மனநிம்மதியைக் கெடுத்து விடும். தன் கணவன்/மனைவி இத்தனை மணிக்கு என்னச் செய்துக் கொண்டு இருப்பான்/ள். அதை யார் மூலம் கேட்டுத் தெரிந்துக் கொள்வது? வீடியோ கால் மூலம் உறுதிச் செய்யலாமா? இப்படி வாழ்ந்தால் வாழ்க்கையே நரகமாகி விடும்.

இதுபோன்ற சூழல் ஏற்படுமென்றால் நல்ல (Counselor) ஆற்றுப்படுத்துணரை சந்திப்பது நல்லது. ஏனென்றால் டாக்டர் பி.ஜே.பிரசாந்தம் அவர்கள் இப்படிப்பட்டவர்கள் தெளிவு பெற நான்கு விதமான காரியங்களைப்பற்றி உரையாடவேண்டும் என்கிறார்.

முதலாவது "தன் போக்கில் கருத்துக் கொள்ளுதல்" (Polarization). அதாவது நான் சரியாக உன்னை கணித்துள்ளேன். நான் நல்லவன்/ள்.  உன்னிடம் தவறு உள்ளது என்று குற்றம் சாட்டுவர் இதைக் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.

இரண்டாவது "உணர்வதில் வேறுபாடுகள்" (Differences in Perception) இருப்பதை உணர்த்த வேண்டும். காரணம் நடக்கிற நிகழ்வுகளை தவறான முறையில் கருதிப் பார்ப்பதும் தவறான விதத்தில் புரிந்துக் கொள்ளுதலும் இருக்கும். அதனை சந்தேகப்படுகிறவர்களுக்கு விளக்கி மன இறுக்கத்திலிருந்து வெளிவர உதவிட வேண்டும்.

மூன்றாவது "உறவில் மாறுபாடு"(Change in Relationship) ஏற்பட்டிருப்பதை சுட்டி க்காட்ட வேண்டும். அன்பினால் இணைக்கப்பட்ட தம்பதிகள் வெறுப்புணர்வாலும், இரக்கமற்ற செயலாலும் ஒருவரை ஒருவர் தாக்கவும், கொலைச்செய்யும் அளவிற்குச் செல்வதையும் எடுத்துக்கூறி சரிச் செய்ய வேண்டும்.

நான்காவதாக "கருத்து வெளியிடுவதில் மாற்றம்" (Change in Communication) நிகழ்ந்திருப்பதை காண்பிக்கவேண்டும். திறந்த மனதுடன் பேசி தெளிவுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக தவறுதலாக புரிந்துக் கொள்வதும், மனதிற்குள்ளே அடக்கிக்கொண்டு எரிச்சலுடன் செயல்படுவதையும் சுட்டிக் காட்டி அதிலிருந்து வெளியே கொண்டு வர முற்பட வேண்டும்.

இவ்வாறு தம்பதியருக்குள் ஆற்றுப்படுத்துதல் நடைபெறும் போது புது வாழ்வு வாழ்வதற்கு உதவிட முடியும். இறைவனின் முன்பு தங்கள் குறைகளைச் சொல்லி புத்துணர்வை பெற்றுக் கொள்ள இயலும். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments