வற்றிப்போன அன்பு


தஞ்சை மாவட்டத்தில் மிக சிறப்பாக ஒரு திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் வசிக்கும் தன் கணவனோடு மகிழ்ச்சியோடு வாழப்போகிறோம் என்ற கனவுகளோடு கணவன் வீட்டிற்குள் வந்தாள். திருமணமானவுடனே மனைவியை கையோடு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றது. கொடுத்து வைத்தவள் நீ என்று நண்பர்கள் வாழ்த்திச்சென்றனர். அவள் கணவனின் கைகளை பிடித்தவாறு பறந்து சென்றாள் இந்தியாவிற்கு  good  bye சொல்லிவிட்டு.

நாட்கள் கடந்தது, மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. வளர் பிறையாக இருந்த மகிழ்ச்சி ஏனோ கருத்து வேறுபாட்டால் தேய்பிறையாக மாற ஆரம்பித்தது. உள்ளத்தில் உறுதிக்கொண்ட அப்பெண் இந்தியாவிற்கு வந்து தன் பெற்றோருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். தன்னாலும் தனித்து வாழமுடியும், வெளிநாட்டு கரன்ஸி தனக்கு தேவையில்லை என்று கணவனின் உதவியை உதறி தள்ளினாள். வேலைப்பார்த்து தன் பிள்ளையைக் காப்பாற்ற முடியும் என்று வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.  

வெளிநாட்டில் வாழ்ந்த அவள் கணவனுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. தன் உதவியின்றி தன் மனைவி தனித்து வாழ முடியும் என்று வேலைப்பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முடிவுக்கட்ட நினைத்து தன் நண்பர்களுக்கு தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு தன் மனைவி வேலைப்பார்த்து வரும்போது வாகனத்தை கொண்டு மோதி கொல்ல plan போட்டு கொடுத்தான். நண்பர்கள் இதனை வெற்றிகரமாக முடித்தனர். இந்த plan வெளியானதால் இப்பொழுது கம்பி எண்ண வேண்டிய சூழலுக்குள் மாப்பிள்ளை செல்கிறார்.

ஒரு குடும்பம் உலகில் இணையும் போது ஆண்டவர் மகிழ்கிறார். தன்னுடைய விருப்பத்தை மனுஷன் மனுஷி நிறைவேற்றுவதில் அவருக்கு சந்தோஷம் தான். ஆனால் சந்தோஷம் நீடிக்க விடாமல் பல விதமான பிரச்சனை ஏற்படுகிறது. இதன் விளைவாக தற்கொலை, கொலை, விபத்தை ஏற்படுத்தி காயப்படுத்துதல், கோர்ட், கேஸ், காவல்துறை என்று பல்வேறு விதமான சூழலுக்குள் செல்கின்றனர். 

இவ்வாறு இன்று மகிழ்ச்சியை இழப்பதற்கு மணமக்களிடம் காணப்படுகிற தீய கெட்ட பழக்க வழக்கங்கள், ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளாமை, பொறுமையில்லாத சூழல்கள், அளவுக்கு அதிகமான பணம் இளம் வயதினிலே சம்பாதிப்பதால் ஏற்படும் சுயசார்பு, பிறரை மதிக்காமல் செயல்படுதல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் செயல்படுதல் போன்ற பல்வேறு காரணங்களினால் மகிழ்ச்சியான குடும்பங்கள் சீர்குலைந்து விடுகிறது. 

குடும்பங்கள் சீர்குலைந்துப் போகும் போது இந்தியாவைப் பொறுத்தவரை சிலர் நேரடியாக திருமண முறிவைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். சிலர் நீதிமன்றத்திற்கே போகாமல் பிரிந்து வாழ்ந்தும் வருகின்றனர். இவ்வாறு வாழும் போது பிறரை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால் காலப்போக்கில் இணைந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் ஏற்படுவது இயற்கை. சூழல்கள் மாறும் போது தங்கள் குறைகளை உணர்வதற்கும், திருந்தி வாழ்வதற்கும் வழிவகுக்கும். சில வேளைகளில் பெற்றோர் அல்லது உறவினர் அல்லது நண்பர்கள் உதவியோடு சேர்ந்து வாழ்வதற்கு இயலும்.   

நீதிமன்றத்திற்கு போகாமல் பிரிந்து வாழ்பவர்கள் ஒருவரை ஒருவர் அழிக்க நினைப்பது வக்கிரகத்தன்மை. நம்மை விட்டு பிரிந்துப்போனவர்கள் இனி வாழவேக்கூடாது, அவர்களை எப்படியாவது அழித்து, ஒழித்து விட வேண்டும் என்று கொல்ல முற்படுவது மிகவும் மோசமான தன்மை.

மோசே காலத்திலும் திருமண உறவுக்குள் சண்டைகள் வந்து, அவை வளர்ந்து மனைவியைக்கொன்று விடும் அளவிற்குச்  சென்ற போதுதான் மோசே யோசிக்கிறார். மக்களுடைய இருதயமானது மிகவும் கடினமாகக் காணப்படுகிறது. இதனால் மனைவியைக் கொன்று விடுவதற்கும் இவன்  தயங்குவதில்லை.எனவே ஒரு பெண் தன் கணவனால் கொலைச் செய்யப்படுவதைக்காட்டிலும் அவள் வாழ்வதற்கு வழியை ஏற்படுத்த வேண்டும் என்ற சூழலிலே தான் தள்ளுதற் சீட்டை எழுதிக்கொடுத்து மனைவியைத் தள்ளி விடலாம் என்று கூறுகிறார். இதனை இயேசுவானவர் தெளிவாக மாற்கு 10:5 ல் கூறும்போது "...உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்" என்கிறார். 

இன்றைக்கு சில முரட்டாட்டமான கணவன்மார் தங்கள் மனைவியை ஏதாவது  ஒருவிதத்தில் கொலைச் செய்ய முற்படுவதும், அதே வேளையில் சில பெண்களும் கூலிப்படையை வைத்து கணவரைக் கொல்வதும் நடக்கிறது. ஆனால் இறைவன் பார்வையில் மிகவும் வேதனைத்தருகிறச்  செயல் என்பதை  மறந்துவிடக்கூடாது.

தேவன் இணைத்தவர்களை மனுஷன் எவனும் பிரிக்காதிருக்கக்கடவன் என்று (மாற்கு 10:9) இயேசுவானவர் திரும்ப கூறக்காரணம், திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரும் போது அதை சற்று அமைதியாக விட்டு விடுங்கள். பிரச்சனைகள் என்பது எல்லாருடைய வாழ்விலும் அது ஒரு பகுதியாகவே இருக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது எதிர்தரப்பினரை அழிப்பது அல்ல. அவர்கள் உங்களுக்கு செய்த ஒரு நன்மையை நினைத்துப் பாருங்கள். உங்களை மகிழப்பண்ணின ஒரு சம்பவத்தை யோசித்துப்பாருங்கள். திருமண வாழ்வின் துவக்கத்தில்  உங்களுக்கு அருகில் அமர்ந்து உணவைப்போட்டுக்  கொடுத்து  அன்பை வெளிப்படுத்தியதை சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது உங்கள் துணையை அழிக்க நினைக்கமாட்டிர்கள்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர் 
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Post a Comment