அம்மா என்னை விட்டுவிடுங்க


குடிப்பது அப்பா, சண்டைப் போடுவது அம்மா, பாதிக்கப்படுவது இளம் பிஞ்சுகள்! எவ்வளவு பரிதாபம்!! கரோனா நோயால் பாதிக்கப்பட்டு மரித்துப் போன தந்தை, வேலைச் செய்து பழக்கமில்லாத தாய், விஷம் கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள்! எத்தனை எத்தனை செய்திகள் நம்மை சுற்றி உலாவி வருகிறது. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தானும், தன் பிள்ளைகளும் உயிரை விடுவது தான் என்று முடிவு எடுப்பது எத்தனை சிக்கலுக்குள்ளாக்குகிறது. நான் என் உயிரை எடுத்துக்கொள்வதற்கு கூட உரிமைக் கிடையாது. அப்படியிருக்கும் போது ஒன்றுமறியாத பிள்ளைகளுக்கு நஞ்சைக்  கொடுத்து வாழ்க்கையை முடிப்பதற்கு யார் உரிமைக் கொடுத்தது? இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குடிகார கணவனுடன் வாழ்க்கை நடத்துவதில் ஒரு இளம் பெண்ணுக்கு சிக்கல் ஏற்பட்டது. இளம் வயதிலேயே குடித்து பழகினான். ஓட்டுனர் பணிக்குச் சென்ற போது தவறான நண்பர்களால் குடி பழக்கம் வலுப்பெற்றது. தினமும் மனைவியுடன் சண்டை. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இதுப் பழகிப் போகிறது. அவன் குடித்துவிட்டு வந்தால் வீட்டில் அடிதடிதான். நமக்கு எதுக்கு வம்பு, நாம் எதாவது உதவிச் செய்யப் போக, அவன் தூஷணவார்த்தைகளால் வறுத்தெடுப்பானே என்ற பயம். எனவே அன்றும் வழக்கம் போல் நாடகம் அரங்கேறியது. வேதனைத் தாங்க முடியவில்லை, அவமானம் தாங்க முடியவில்லை. ஆறுதலுக்கு 3 வயது மகன் மட்டுமே. வாழ்க்கையே வெறுமையானது. தனித்து உயிரை விட்டு விட முடிவெடுத்தாள். பிள்ளையின் எதிர்காலம் என்ன ஆகும்? குடிக்கிற தகப்பன் பிள்ளையை எப்படி வளர்ப்பான்? என் பிள்ளை அனாதை ஆகிவிடுமே என்ற பயம். நமக்கு பின்பு பிள்ளைக்கு உணவை ஊட்டி விடுவது யார்? பால் கொடுத்து  வளர்ந்த பிள்ளை, பீர் கொடுத்து வளர்க்கப்பட்டு விடுமோ என்ற அச்சம். குடிகாரன் மகன் என்ற பட்டத்தோடு பிள்ளை வாழ வேண்டுமா? நம்மோடு பிள்ளையும் சாகட்டுமா என்று தடுமாறியது. தடவிக்கொடுத்த கைகள் பிள்ளையின் கழுத்தை அழுத்தியது. பிள்ளைக்குப் புரியவில்லை. தாயே உயிரை எடுக்கும் பேயாக மாறியதை  அந்த பிஞ்சுக்கு புரியவில்லை. அம்மா விட்டு விடுங்க என்று கதறியிருக்க வேண்டும். நான் பிழைத்துக் கொள்வேனே என்னை ஏன் கொல்லுகிறாய்? நீ தாயா? அல்லது பேயா? என்று முனங்கியிருக்க வேண்டும். கல்நெஞ்சோடு பிள்ளையை கழுத்தை நெறித்தே கொன்று விடுகிறாள். சாவின் வெறித்தனம் தாளாமல் அவளும் தொங்கி விட்டாள்.

குடி குடியைக் கெடுக்கும் என்று மது பாட்டிலில் எழுதி வைப்பதால் எத்தனை குடிகாரர்கள் திருந்தியுள்ளார்கள். ஒன்றுமறியாத  சிறு பிள்ளைகளின் வாழ்வையே எடுத்து விடுகிறது. யாரோ குடிப்பது, யாரோ உழைப்பது, யாரோ உயிரை விடுவது எவ்வளவு மோசமான நிலை. குடும்பத்தையே நிலை குலைய வைத்து விடுகிறது.

பல்வேறு சூழல் நிலையை எதிர்கொள்ள முடியாமல் பலர் தாங்கள் தற்கொலைச் செய்வதோடு மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் கொல்லுவதற்கு துணிந்து விடுகின்றனர்.

ஒரு புள்ளி விபரத்தின் படி 15-40 வயதுடையவர்களே 75%பேர்  தற்கொலைச் செய்துக் கொள்ளுகின்றனர். இளம் வயது உடையவர்களே அதிகம் என்பது தெரிகிறது. தற்கொலைக்கான காரணங்கள் சில உள்ளன. குறிப்பாக

  1. நம்பிக்கை இழந்த மண முறிவு நிலை மற்றும் கொடிய நோய்களால் தாக்கப்பட்டவர்கள்
  2. குடும்ப வாழ்வில் சண்டைகள் ஏற்படும் போது 
  3. குடும்பத்தில் உள்ள உறவினர்களிடம் தொடர்ந்து சண்டைப் போடுதல்  
  4. வறுமை, குடிப்பழக்கம்
  5. தேர்வுகளில் தோல்வி
  6. காதல் விவகாரங்களில் ஏமாற்றம்
  7. மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
  8. சொத்துக்கள் பகிர்வதில் ஏற்படும் சண்டைகள், விரக்தியான சூழல் இவைகள் தான் முக்கிய காரணங்கள் என டாக்டர்.பி.ஜே.பிரசாந்தம் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு பிரச்சனைகளால் மாட்டிக்கொள்ளும் போது உங்கள் வேதனைகளைப் பகிர்ந்துக் கொள்ளுவதற்கு ஏற்ற ஒரு நம்பிக்கையான நபரைத் தெரிவு செய்துக்கொள்ளுங்கள். அல்லது ஒரு போதகரிடம் அல்லது  ஆற்றுப்படுத்துனரிடம்  சென்று உங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் மனம் இலகுவாகும்.

“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று இயேசுவானவர் கூறுகிறார். நீங்களும், உங்கள் பிள்ளைகளும் அழிந்து போவது இறைவனின் திட்டமல்ல மாறாக துன்பத்தைத் தாண்டி வாழ்வதற்கு உதவிச் செய்ய வல்லவராயிருக்கிறார்.

உங்கள் கணவர் திருந்துவதற்காக முறையான மருத்துவத்தைக் கொடுப்பதற்கு திட்டமிடுங்கள். இறைவனிடம் மன்றாடுங்கள். மதுவுக்கு அடிமையாய் இருந்த பலர் இன்று விடுதலையாகி மகிழ்வோடு வாழ்கிறார்கள். எனவே நம்பிக்கையோடு வாழுங்கள். உங்கள் பிஞ்சுக்குழந்தைகளை வாழ்வதற்கு விட்டுவிடுங்கள்.

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி