பொறுமையோடு ஓடுங்கள்


வாழ்க்கையில் பணம் எதிர்பாராமல் வந்து குவியலாம். நாம் தொட்டதெல்லாம் பொன்னாக மாறலாம். வியாபாரங்கள் எல்லாம் பெருகிக்கொண்டே செல்லலாம். செலவச் செழிப்பில் நாம் உழலலாம். பாயில் படுத்தவர் பட்டு மெத்தைக்குச் செல்லலாம். ஆனால் வாழ்க்கையில் நிதானமாக பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக பணத்தை கையாளுவதில் கவனம் வேண்டும். இல்லாவிட்டால் முழு குடும்பமே பாதிப்புக்குள்ளாகி விடும்.

மென்பொருள் துறையின் முன்னோடி என அழைக்கப்படும் mcafee antivirus நிறுவனத்தின் நிறுவனர் ஜான் டேவிட் மெக்காஃபியின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. 75 வயதான அவர் கணிணி பாதுகாப்பு anti virus தயாரிப்பில் முன்னோடியாக இருந்தார். ஆனால் 2014 முதல் 2018 வரை அமெரிக்காவில் வரி கணக்கை சரியாக காட்டாமல் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார். எனவே இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் 2020ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று சிறையிலேயே இறந்துப் போனார். அது ஒருவேளை தற்கொலையாக இருக்கலாம் என்ற நிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் தன்னுடைய 75வது வயது பிறந்த நாளின் போது தனது டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 18,2020ல் குறிப்பிட்ட போது "75 வயது வரை எனது வாழ்க்கை என்ற ரோலர் கார் பரலோகத்திற்கும் நரகத்திற்கும் இடையே பொறுமையோடு போய்க்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக வேகமாக வந்த ரயில் குறுக்கிட்டதால் எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப தலைவர்/தலைவி நினைவில் நிறுத்த வேண்டிய ஓன்று அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை ஏய்க்காமல் சரியாகக் கட்ட வேண்டிய நேரத்தில் கட்ட முற்பட வேண்டும். இயேசுவிடம் "இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்". அதற்கு இயேசு, "..இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்" என்றார். (மத்தேயு 22:17,21) இயேசுவின் காலத்தில் ரோமர்களுக்கு வரிச் செலுத்துவதற்கு யூதர்கள் விரும்பவில்லை. ஆனால் காலத்தின் கட்டாயத்தினால் எரிச்சலோடு வரிகட்டினார். நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சிச் செய்த போது பலவிதமான வரிகள் போடப்பட்ட போது மக்கள் எரிச்சலுடனும், மறுப்புடனும் செலுத்தினர். அதைப் போன்று தான் இஸ்ரவேல் மக்களும் எரிச்சலுடன் வரிசெலுத்தி வந்தபோது இயேசுவிடம் கேட்கின்றனர். ஆனால் இயேசுவோ ஞானமாக பதிலளித்தார்.

இன்றைக்கு பலவிதங்களில் வரிசெலுத்தாமல் இருக்க கணக்கை மறைக்க முற்படுவது தவறு. இரட்டை கணக்குகளை பயன்படுத்துவது, வருமானத்தை மறைத்து, குறைத்துக் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் சிலர் ஆலயத்திற்கும் ஊழியத்திற்கும் வாரி வழங்குகின்றனர். ஆனால் இயேசுவின் பார்வையில் இது முறைகேடான செயலாகும்.

வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்குச் செல்லும் நீங்கள் உங்கள் கணக்கை மறைப்பதால் கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்தை மறைக்கிறீர்கள். உண்மையும் உத்தமுமான இறைமக்களாக வாழமுற்படுங்கள். இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள். இராயனுடையதை மறைத்து தேவனுக்குச் செலுத்தவேண்டாம். அதை இயேசு விரும்பவில்லை. அரசாங்கத்தின் நியதிகளுக்கு கட்டுப்பட்டு தான் வாழவேண்டும்.

இன்றைக்கு ஊழியங்களைச் செய்கிறவர்கள், சிலர் நான் யாருக்கும் கணக்கு காட்டவேண்டிய அவசியம் இல்லை என்று ஆடம்பரமாக வாழ்ந்து, பின்னர் அரசாங்கத்தின் கிடுக்கிப் பிடிக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். நாம் ஊழியங்களைச் செய்தாலும் வரவு செலவு கணக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்கும், கொண்டு வரும் பொருட்களுக்கும் சரியான வரி செலுத்துங்கள். கடவுளின் ஊழியக்காரர் என்ற போர்வையில் ஒளித்துக் கொள்ள விரும்பாதிருங்கள். உங்கள் மனைவி, பிள்ளைகள் என்று பல பெயர்களில் பணத்தையும், சொத்தையும் பிரித்துக் காட்டி அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்காதிருங்கள். உங்களைக் காப்பாற்ற வருகிற போகிற அரசியல்வாதிகளுக்கு வணக்கம், சலாம் சொல்லி கடவுளின் நாமத்திற்கு இழுக்கை உருவாக்காதிருங்கள். அரசியல் மாறும் போது முழு குடும்பமும் சிக்கலுக்குள்ளாகி விடும். குடும்பத்தின் சந்தோஷத்தை இழக்க நேரிடும். கடவுளுக்கு மட்டும் பயப்பட வேண்டிய நீங்கள், உங்கள் சொத்தை, பணத்தைக் காப்பதற்காக அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் பயப்படும் சூழல் ஏற்படும். 5,000 ரூபாய் வரிக்கட்டிய நீங்கள் வருமானம் பெருகும் போது 50,000 ரூபாய் கட்ட ஏன் வருத்தப்படுகிறீர்கள்? கடவுள் உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் வரி மட்டும்கட்டக் கூடாது என்றால் எவ்வளவு அபத்தமான காரியம். எனவே இன்றிலிருந்து முழு குடும்பமும் எப்பொழுதும் சமாதானமாய் இருக்க சரியான வரியைக் கட்ட தீர்மானிப்போம்.  

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி