சீனாவில் ஹாய்சோ என்ற நகரில் ஏழை குடும்பத்தில் 1964ம் ஆண்டு பிறந்தவர் ஜாக்மா. சிறுவயதிலே வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவாயை ஈட்டியவர். மெதுவாக ஆங்கிலப் புலமை பெற எண்ணி இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக மாறினார்.
இணையதளத்தின் வருகையால் அவர் வாழ்க்கையில் ஜாக்பாட் அடித்தது. மூளையை கசக்கி பிழிந்த அவருக்கு கிடைத்தது தான் ‘Alibaba’ நிறுவனம். இணையத்தை பயன்படுத்தி மக்கள் பொருள்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஏற்ற விதமாய் அமைத்து பார்த்தார். ஜெட் வேகத்தில் அவர் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஒரு லட்சத்திற்கு மேலாக ஊழியர்கள் அவரது நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தனர். சீனாவின் நாயகனாக வலம் வந்தவர் நாளடைவில் நாளடைவில் உலக நாயகனாக உருவெடுத்தார்.
தொழில் அதிபராக மட்டும் விளங்காமல் அவ்வப்போது அரசை விமர்சிக்கும் நாவை எடுத்தார். உன் நாவை எல்லாக் காவலோடும் காத்துக்கொள் என்பது ஜாக்மாவிற்கு தெரியாமல் போய்விட்டது. உள்ளம் மேட்டிமை அடைந்ததை அவர் புரிந்து கொள்ளவில்லை.
“அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்.” என்ற நீதிமொழிக்கு ஏற்ப அவரது வாழ்விலும் நடைபெற்றது. வாஷிங்டனில் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூடுகை 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜின்பிங், தொழிலதிபர் ஜாக்மா மற்றும் அமெரிக்க தொழிலதிபர்களும் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக மூன்று நிமிடங்கள் மட்டும் தொழிலதிபர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் ஜாக்மா நாவை அடக்க முடியாமல் 10 நிமிடங்கள் பேசி முடித்தார். அந்த அதிகப்பிரசங்கித்தனம் சீன அதிபருக்கு எரிச்சலை கொடுத்தது. பேசுவதற்கும் செயல்படுவதற்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. இது சீனாவில் எழுதப்படாத சட்டம். அதை தாண்டுவது என்பது ஒருவர் தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கு சமம் என்பதை ஜாக்மா மறந்துவிட்டார். இப்பொழுது வழக்கம்போல சீனாவில் ஜாக்மா எங்கே என்று தேடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எசேக்கியல் நூலிலும் தீரு தேசத்தின் மன்னனுடைய மனமேட்டிமையை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இம்மன்னனின் மனநிலை ஆதாமின் மனநிலைக்கு ஒப்பாக உவமிக்கப்பட்டுள்ளது. கடவுள் ஆதாமை உருவாக்கி அவனை தம்முடைய படைப்புகளை ஆண்டு கொள்ள வாய்ப்பளித்தார். ஆனால் அவன் உள்ளத்தில் அகந்தை தலை தூக்கியது. தன்னை கடவுளுக்கு சமமாக கருத தலைப்பட்டான். இறுதியில் உயர்ந்த நிலையிலிருந்து தள்ளப்பட்டான். (எசேக்கியேல் 28: 11 to 19)
இறைவன் உங்கள் வாழ்வில் உயர்நிலையை கொடுக்கலாம், தொழிலில் ஆசீர்வாதத்தை கொடுக்கலாம், உங்கள் பிள்ளைகளின் வாழ்வில் நல்ல உயர்நிலையை கொடுக்கலாம். உடனே உங்கள் இருதயம் மேட்டிமையாகிவிடக்கூடாது. சிலர் மன மேட்டிமை ஆனவுடன் அவர்களின் பேச்சு, செயல் எல்லாமே மாறி விடுகிறது. தங்களை உயர்ந்தவர்களாகக் எண்ணிக்கொண்டு உறவுகள் மற்றும் நண்பர்களை துச்சமாக நினைத்து உதறிவிடுகின்றனர். ஆலயத்தை, கடவுளை மறந்து விடுகின்றனர்.
குறிப்பாக சில பிள்ளைகள் உயர்ந்த பதவிக்கு வந்தவுடன் பெற்றெடுத்த பெற்றோரையே கண்முன் இருக்க விடாமல் விரட்டி விடுகின்றனர். பெற்றோர் தங்களிடம் இருந்தால் அது அவமானம் என்று தங்களோடு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தங்களது வாகனத்திலோ, தங்களது புதிதாக கட்டின வீட்டிற்குள்ளேயோ வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இது ஒரு பரிதாபமான நிலை. இப்படி நீங்கள் செய்வீர்களானால் இப்பொழுது உங்கள் மனம் மேட்டிமையாகி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மனந்திரும்பி தாழ்மையாக நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் இறைவனே உங்களை தாழ்த்த வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம்
உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments
Post a Comment