அருவிகள் பார்த்து பாயட்டும்


சந்தோஷ், சாலினி இருவரும் திருமணத்திற்கு முன் ஆலோசனை (Premarital counselling) பெறுவதற்காக காத்திருந்தார்கள். இருவர் கையிலும் Cell phone விளையாடிக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு சில நாட்கள் தான் இருந்தாலும் நேரடியாக பேசிக்கொள்ளாமல் இருவரும் Whatsapp ல் மூழ்கி தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.    

Father  வர்கிஸ் அவர்கள் மன நிலையை கண்ணாடி அறைக்குள் இருந்து புரிந்துக்கொண்டார். துவக்க நிலையிலே சில உண்மைகளை இளம் தம்பதியாக போகிறவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று உள்ளத்தில் உந்தப்பட்டார்.     

இருவரையும் உள்ளே அழைத்தார். தன்னுடைய மேஜையில் ஒரு கண்ணாடி பாத்திரம் ஓன்று வைத்திருந்தார். அருகில் ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்திருந்த மணலை அந்த கண்ணாடி பாத்திரத்திற்குள் தட்டி நிரப்பினார். பின்பு அழகான கிரிகெட் பந்துகளை எடுத்து இதனை அந்த கண்ணாடி பாத்திரத்திற்குள் வைக்க முடியுமா என்று கேட்டார். சந்தோஷும், சாலினியும், ம்.கூம்.. என்று தலையை அசைத்தனர்.

உடனே Father வர்கிஸ் சொன்னார். இந்த மணல் போன்றது தான் facebook, whatsapp,Twitter, SMS, Chatting, Youtube. இவைகளால் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை நிரப்பி விட்டால் பின்பு கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் போன்றவர்களிடம் நேரம் செலவிட முடியாமல் போய் விடும். மனைவி உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பது கூட மறந்து விடும்! பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பதும் தெரியாமல் போய் விடும்!! உங்கள் வாழ்க்கை பதனீருக்குள் விழுந்த எறும்பு போல் மாறி விடும்!!!! எனவே முக்கியத்துவம் இல்லாதவைகளுக்கு வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டால் வாழ்க்கை சின்னா பின்னமாகிவிடும் என்றார்.

உடனே சந்தோஷ் அப்படியென்றால் இந்த கிரிகெட் பந்தை என்னச் செய்யப்போகிறீர்கள் என்றான்.   உடனே Father வர்கிஸ் அந்த கண்ணாடி பாத்திரத்திலுள்ள மணலை மீண்டும் ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்து விட்டு, கண்ணாடி பாத்திரத்தை வெறுமையாக்கினார்.

மீண்டும் தன்னிடமிருந்த கிரிகெட் பந்துகளை முதலில் உள்ளே போட்டு விட்டு சொன்னார்.   இவைகள் கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், திருமறை, கடவுளைக் குறிக்கிறது.   இவற்றிற்கு முதன்மையாமையான இடத்தை வாழ்க்கையில் கொடுக்கவேண்டும். அப்பொழுது தான் குடும்பம் என்ற அமைப்பில் நிம்மதியாக வாழ முடியும். 

அந்த பையில் என்ன வைத்திருக் கிறீர்கள் என்றாள் சாலினி. அதனை திறந்து காண்பித்தார் Father வர்கிஸ். அவைகள் சிறிய கோலி காய்கள். அவைகளை எடுத்து மீண்டும் அந்த கண்ணாடி பாத்திரத்திற்குள் போட்ட போது அவைகள் அந்த பந்துகளுக்கு இடையேயான இடைவெளிக்குள் சென்று மறைந்துக் கொண்டன.

என்ன Father "இது எதைக் குறிக்கிறது" என்றாள் சாலினி. இது உங்களது வேலையைக் குறிக்கிறது. உங்கள் பணி என்பது முக்கிய மானது. ஆனால் அதற்கும் ஒரு அளவிருக்கிறது. பணி என்பது ஒரு போதையாக மாறி பணியிடத்திலேயே படுத்து தூங்கிவிடக்கூடாது.   அதுவே எப்பொழுதும் சிந்தையாக மாறி, குடும்பத்தை மறந்து விடக்கூடாது. ஆகவே தான் இந்த கோலி காய்களை முதலாவது போடவில்லை. அதனை முதலில் போட்டால் கிரிகெட் பந்துகளுக்கு (கணவன், மனைவி, திருமறை) இடமில்லாமல் போய் விடும். 

மணலை என்னச் செய்யப் போகிறீர்கள் என்று சந்தோஷ் கேட்டான். உடனே Father வர்கிஸ் அதனை நான் வெளியே கொட்டப்போவதில்லை என்று கூறிவிட்டு மீண்டும் அதே கண்ணாடி பாத்திரத்திற்குள் கிரிகெட் பந்து, கோலி காய்களுக்கு மேலே போட்ட போது அது மெதுவாக அதன் இடுக்குகளுக்கு இடையே புகுந்து நின்றுக் கொண்டது.

உடனே சாலினி கூறினாள், Father அப்படியானால் வாழ்க்கையில் இறுதி இடத்தைத் தான் Cell phone க்கு ஒதுக்க வேண்டும் அப்படித் தானே என்று கேட்டாள்.               

Father வர்கிஸ் உள்ளம் மகிழ 'ஆம்' என்று தலையை ஆட்டினார். Father முதல் பகுதியை முடித்து அவைகளை எடுத்து வைப்பதற்காக முயன்ற போது சாலினியும், சந்தோஷும் தங்களுடைய Cell phone யை எடுத்து switch off செய்து வைத்து விட்டார்கள். அதற்கு வேலை இப்பொழுது இல்லையென்று !

"எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை. பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.   மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்.." (நீதிமொழிகள் 19:2,3) என்று திருமறை கூறுகிறது. குடும்ப வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், முக்கியமற்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது குடும்பம் பிரச்சனைக்குள்ளதாக மாறி விடும்.

மனைவி, பிள்ளைகளுடன், திருமறையுடன் நேரம் செலவிடாமல் மணிக்கணக்காக  Facebook friends உடன் உரையாடிக் கொண்டே இருந்தால் இந்த மடமைச் செயலால் குடும்பமே பிளவு பட்டு விடும்.  உங்கள் குடும்பத்தை நேசிக்காமல் முன் பின் தெரியாத நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் ஏற்படும் நன்மை என்ன? குடும்பம் பிரிந்த பின் உங்கள் Facebook friends  உணவை சமைத்து தருவார்களா? நீங்கள் வியாதிப்பட்டால் உடன் மருத்துவமனையில் கூட இருக்கப் போகிறார்களா? மாயை நம்பி 4G  அருவியால் அடித்துச் செல்ல அனுமதியாதிருங்கள் வாழ்க்கையை!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

உண்மையை உரக்க சொல்வோம்

உண்மையை மூலதனமாக்கு

தேன் தடவிய வார்த்தைகள்