என் கூடவே இரும்



நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் என்னை அன்போடு உபசரித்து விட்டு சற்று உள்ளே வாருங்கள் என்று உள் அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் ஒரு நபர் படுத்து இருந்தார்கள். அவர்களை காட்டி இது என் சகோதரன், அரசாங்கத்தில் நல்ல உயர்ந்த பதவியில் இருந்தவர். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினதினால் தற்பொழுது பணி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கி விட்டான் என்றார்.

மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் எல்லாருக்கும் வேலை, தொழில். தனிமையில் வாடுகிறான். ஆகவே எங்கள் வீட்டில் இருக்கிறான். நீங்கள் வந்து அவனோடு சில நிமிடங்கள் பேசினால், ஜெபித்தால் அவனுக்கு ஆறுதலாக இருக்கும் என்றார்.

சில வேளைகளில் எதிர்பாராத சம்பவங்கள் நம்மை முடமாக்கி விடுகிறது. ஆனால் அந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை தளராமல் மாற்று திறமைகளை வெளிக்கொண்டு வந்து வாழ்வை மகிழ்ச்சியாக்கி கொள்ள முயலுவது முக்கியமானது.

18 வயது நிரம்பிய ஃப்ரீடா காலோ என்ற பெண் (1904-1954) மெக்சிகோவில் பட்டாம்பூச்சி போல சிறகடித்துப் பறந்து வந்தாள். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்து ஒன்றில் மாட்டிக் கொண்டாள். உடலில் ஏற்பட்ட ஊனமும், அதைவிட உள்ளத்தில் ஏற்பட்ட மரண பயமும், தனிமை உணர்வும் மிகவும் வலித்தது.

வலிகளை மறப்பதற்கு வலி நிவாரணியாக ஓவியம் வரைய ஆரம்பித்தார். அதற்கு ஆதாரமாக அவரை ஈர்த்த சோஷலிச கொள்கைகளை தத்ரூபமாக வரைய ஆரம்பித்தார். அநீதிகளையும், அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும் தன்னுடைய ஓவியத்தின் வழியாக வெளிக்காட்ட ஆரம்பித்தார். அவருடைய கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஓவியத்தில் இளையோட ஆரம்பித்தது. தன் தனிமையையும், மனச்சோர்வையும் ஒவ்வொரு ஓவியத்திலும் பிரதிபலிக்க ஆரம்பித்தார்.

அடைபட்டுக்கிடந்த ஃப்ரீடாவிற்கு தன் முகத்தையே சித்திரத்திற்கு அளவுகோலாக பயன்படுத்த ஆரம்பித்தார். தன் வாழ்வில் ஏற்பட்ட வாழ்க்கைப் போராட்டத்தை, நம்பிக்கையை மற்றும் விரக்தியை வெளிக்காட்ட முற்பட்டபோது அவர் காலத்திலேயே சிறந்த முன்னோடியான ஓவியராக மாறிவிட்டார். இறுதியில் புகழ்பெற்ற ஓவியக் கலைஞராக கோலோச்சிய கலைஞர் டியாகோ ரிவேராவையே கரம் பிடித்து வாழ்ந்து காட்டினார்.

நாம் எதிர்பாராத சூழல்களுக்குள் மாட்டிக்கொள்ளும் போது இறைவன் கைவிடாமல் உதவி செய்கிறவராக இருக்கிறார். திருமறையில் மேவிபோசேத் என்ற இளைஞனை பார்க்க முடிகிறது. அவனுடைய தந்தையான சவுல் அரசன் இறந்த பின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி போனது. ஆனால் தாவீது உள்ளத்தில் கர்த்தர் இருந்தபடியால் மேவிபோசேத்திற்கு இடம் மீண்டும் வழங்கப்பட்டு, வேலையாட்களும் கொடுக்கப்பட்டு வாழ்வு வாழ கடவுள் உதவினார்.(2 சாமுவேல் 9)

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் இறைவன் யார் மூலமாவது உதவியின் கரத்தை நீட்டி ஒவ்வொருவரையும் தூக்கி விடுகிறார். ஏனென்றால் அவர் மங்கி எரிகிற திரியை அணைக்காதவர், நெரிந்த நாணலை முறிக்காதவர், நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியாதவர், உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. ஒருவேளை உங்கள் மனைவி, கணவன், பிள்ளைகள், பெற்றோர் யாராவது எதிர்பாராத சிக்கல்களுக்குள்  மாட்டிவிட்டால் பயனற்றவர்கள் என்று ஒதுக்கி விடாதிருங்கள். இறைவன் அவர்கள் வழியாகக் கூட தொடர்ந்து நன்மையான காரியத்தை செய்வார். ஒருவேளை physical support  இல்லாமல் இருக்கலாம், ஆனால் mental support பண்ண முடியும்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments