இறைவனின் பெயரால்


ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் தன் இரு மகள்களுடன் வசித்து வந்தார். இரண்டு மகள்கள் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்த தாயார் இறந்து விட இரண்டு மகள்களும் தாய் உயிர் பெற்று வந்து விடுவார்கள் என்று கதவை பூட்டிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டே இருந்தார்கள். இறுதியாக காவல்துறையினர் வந்த போது அழுகிய நிலையில் பிணம் இருந்தது. ஆனால் நாங்கள் ஜெபம் செய்தால் எங்கள் தாய் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் என்று காவல்துறையினரிடமும், மருத்துவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

லாசருவின் உடல் மரித்த பின் மூன்று நாள்களுக்கு பின் உயிர்த்தெழவில்லையா அதுபோல் நடக்கும் என்ற எண்ணம் அந்த பிள்ளைகளுக்கு இருந்தது. ஆனால் சிலர் மரிக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உறவினருக்கு வருவதில்லை. இது மனநிலையில் “மறுக்கும் நிலையை” குறிக்கிறது. அவர்கள் இறந்திருப்பது என்பது ஒரு பொய்யாகத்தான் இருக்க கூடும் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இது நிச்சயமாகவே நடந்திருக்காது என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. சிலவேளைகளில் இப்படிப்பட்ட தாங்க முடியாத இழப்புகள் வரும் போது அவர்களையும் அறியாமல் கனவுலகிற்கு  போய்விடுகிறார்கள். காரணம் இழப்பு என்பது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் உள்ளது.

இரண்டாவது பெண் பிள்ளைகள் இருவரும் 40, 43 வயது ஆகும் வரையில் திருமணம் செய்து கொடுக்காத தாய். சிலர் திருமண வயது கடந்து சென்றாலும் கர்த்தர் எங்களோடு பேசினால்தான் சம்மதம் செய்யமுடியும் என்று பிடிவாதமாக இருக்கின்றனர். உண்மையிலேயே ஆபிரகாமுக்கு ஆண்டவர் ரெபேக்காள் என்ற மருமகளை கொடுப்பார் என்று நேரடியாக சொல்லவே இல்லை. அப்படி சொல்லி இருந்தால் எலியேசரை லாபான் வீட்டிற்கே அனுப்பி இருக்கலாம். ஆனால் எலியேசர் ஜெபிக்கிறான், அவனாகவே ஒரு வரைமுறையை வைத்துக் கொள்கிறான், இப்படி நடந்தால் இறைவனின் சித்தம் என்று நான் எடுத்துக் கொள்வேன் என்ற முடிவுக்கு வருகிறான். திருமறையில் எந்த இடத்திலும் உனக்கு இந்த மணமகனை, மணமகளை வைத்துள்ளேன் என்றோ, உனக்கு இந்த திசையில் இருந்து மணமகன் மணமகள் வருவான் என்றோ குறிப்பிடவில்லை.

திருமறையில் இல்லாத ஒன்றை போலியான ஊழியர்கள் கூற மக்கள் அதை நம்பி, எந்த ஒரு திருமண வரன் வந்தாலும் இது என் மகனுக்கு/மகளுக்கு பொருத்தம் சரியா என்று குறி கேட்பதை போல் கேட்க போகின்றனர். ஆனால் கர்த்தர் காரியங்களை வாய்க்க  செய்திருக்க நீங்கள் தடை சொல்லாதிருங்கள் என்று எலியேசர் கூறுகிறார். (ஆதியாகமம் 24)

ஜெபிக்க வேண்டியது நமது பொறுப்பு, விசாரிக்க வேண்டியது நமது பொறுப்பு, காரியத்தை கைகூடி வர செய்வது கர்த்தரின் பொறுப்பு. தடைகள் இருப்பினும் சரியான பொருத்தம் இல்லை என்றால் இந்த காரியம் வாய்க்காமல் போகட்டும் என்று கூட நாம் ஜெபிக்கலாம்.

நாம் எங்கேயும் வரன் தேடி போகாமல் கர்த்தர் வாய்க்க செய்வார் என்று வீட்டிலே நாம் இருந்தால் பிள்ளைகளுக்கு வயது 40 ஆனாலும் வரன் வராமலே போகலாம். இதற்காக ஆண்டவர் மேல் பழி சுமத்த முடியாது. வயது ஆக ஆக பிள்ளைகள் மன அளவிலே பாதிப்புக்குள்ளாகின்றார்கள். நம் பெற்றோர் சரியான வரன் பார்க்காமல் இருக்கிறார்களே என்று மனதிற்குள் வருந்துவார்கள். ஆனால் வெளியே சொல்ல முடியாமல் தவிப்பார்கள்.

சில பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்களை கவனிப்பதற்கு ஆள் இல்லாத போது பிள்ளைகளுக்கு வரனை பார்க்காமல் அல்லது பார்ப்பது போல் நடித்து, தங்களுக்கு சேவை செய்பவர்களாக மாற்றியும் விடுகின்றனர். இப்படி சுயநல, பொறுப்பற்ற பெற்றோர்களும் தற்காலத்தில் பெருகி வருகிறார்கள். பெற்றோர்களே உங்களைப் போல் உங்கள் பிள்ளைகளும் வாழ்வதற்கு வழி தேடுங்கள்.

“நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?” என்று ரூத்தை பார்த்து நகோமி கூறுகிறாள். ஆனால் ஒரு தாய் 43 வயது வரை திருமணமாகாமல் வைத்துவிட்டு இறந்து போய் விட்டாரே, இனி பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? யோசியுங்கள் பெற்றோர்களே! இறைவனின் பெயரால் கடமையை மறந்து ஒளிந்து கொள்ளாதிருங்கள். 

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி