செய் நன்றி

 


ஜூலியஸ் அன்று ஆலயத்திற்கு தொங்கிய முகத்துடன் அமர்ந்து  இருந்தான். அன்று மட்டுமல்ல சில மாதங்களாகவே தனியாகவே வந்து கொண்டிருப்பதை கவனித்தேன். ஆலய ஆராதனை முடிந்ததும் அவரை அனுகி, “என்ன familyயில் மற்றவர்கள் வரவில்லையா?” என்றேன்.

சிரித்துக் கொண்டே, “வரவில்லை” என்று சமாளித்தான். மாலை வேளையில் என் தொலைப்பேசியில் ஜூலியஸ் தொடர்பு கொண்டு, “என் மனைவி என்னை விட்டு பிரிந்துப் போய் விட்டாள்.   நான் அவளுக்குச் செய்ததை எல்லாம் மறந்து விட்டாள்” என்று புலம்பி தீர்த்தான்.

ஜூலியஸ், எமியைத் திருமணம் செய்துக் கொண்டபின்  உயர் படிப்பு படிக்க வைக்க அதிக முயற்சி எடுத்துக் கொண்டான். எப்படியாவது நல்ல வேலையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நடையாய் நடந்தவன். குடும்பம் தான் இப்பூமியில் பரலோகம் என்று நினைத்தவன். ஆனால் ஜூலியஸ் செய்த சின்ன விஷயத்தை பெரிதாக்கி பார்த்ததால் எமி பிரிந்து சென்று விட்டாள்.

  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

என திருவள்ளுவர் கூறுகிறார். இதன் பொருள் தினை அளவு ஒருவர் நன்மைச் செய்தாலும் பயனை ஆராய்ந்து பனை அளவாக மதிப்பிட வேண்டும் என்கிறார்.

அரசன் ஒருவனிடம் ஒரு அடிமை வாழ்ந்து வந்தான். அவன் பெயர் டமாக்ளியஸ். ஒரு முறை நைஸாக டிமிக்கி அடித்து விட்டு escape ஆகிவிட்டான். அரசன் ஆட்களை விட்டு தேட ஆரம்பித்தான்.

கையில் மாட்டி விடக் கூடாது என்பதற்காக ஒரு காட்டு வழியாக ஓட ஆரம்பித்தான், அது அடர்ந்த காடு. வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதி. இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காட்டுக்குள் புகுந்தான்.

திடீரென்று ஒரு சத்தம். ஆனால் அது ஒரு மிருகம் முக்கல் முனகலுடன் வலியால் சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

அந்த பக்கம் எட்டிப்பார்த்தான். ஒரு சிங்கம் நடக்க முடியாமல் பாதம் வீங்கி, சீழ் வடிந்து பரிதாபமாக காணப்பட்டது.

உள்ளத்திற்குள் சிங்கத்தைப் பார்த்த பயம். ஆனால் அது நகர முடியாமல் வலியில் துடித்ததைப் பார்த்தவன் மனம் இறங்கி மெல்ல மெல்ல அருகில் போனான். காலை எடுத்து காட்டியது சிங்கம். காலில் இருந்த பெரிய முள்ளை பிடுங்கி எடுத்தான். நன்றாக சீழை வெளியே எடுத்து தன் சட்டையால் துடைத்து, காயத்தை கட்டி விட்டு புறப்பட்டான்.

கொஞ்ச தூரம் போன போது அரசரின் ஆட்கள் அவனை கையோடு பிடித்தனர். பின்பு சிறையில் தள்ளினர்.

ஒரு நாள் அரசன் அவனை கொல்ல திட்டமிட்டான். கொடிய மிருகங்களுக்கு, இரையாவதைப் பார்த்து ரசிக்க திட்டமிட்டான்.

அன்று அரசன், டமாக்ளியஸ் சாவதை பார்க்க உயரத்தில் உட்கார்ந்திருந்தான். டமாக்ளியஸ் களத்தில் விடப்பட்டான். தான் சாவது உறுதி என்றாலும் தன்னை முடிந்தவரை காத்துக் கொள்ள ஆயத்தமானான். சில நாட்களாக உணவு போடப்படாத ஒரு சிங்கத்தை திறந்து விட்டனர். அது பாய்ந்து வந்தது. அரசன் உட்பட பலர் கைகளைத் தட்டி, விசில் பறக்க எல்லாருடைய கண்களும் டமாக்ளியஸ் மீது திரும்பியது.

பாய்ந்து வந்த சிங்கம். டமாக்ளியஸ் அருகில் வந்ததும் பூனையைப் போல் தலையை ஆட்டி, டமாக்ளியஸை நாவினால் வருடியது. தன் வலது காலை எடுத்துக் காட்டியது. 

டமாக்ளியஸ் பார்த்து அசந்துப் போனான். தன்னால் காயங்கட்டப்பட்ட சிங்கத்தின் பாதம். அதற்கு ஒரு முத்தமிட்டான். 

கூட்டம் விண்ணை பிளக்கும் அளவிற்கு, “இவனை விடுவியுங்கள்.   இவனை விடுவியுங்கள்” என்று கத்தியது.

இறுதியில் டமாக்ளியஸை அருகில் அழைத்து உண்மை நிலையை அறிந்தார் அரசன். ஆச்சரியத்தில் அவனை விடுவித்து சுதந்திரமாக செல்ல கட்டளையிட்டார் அரசர்.

ஒரு மிருகம் கூட நன்றி உள்ளதாக மாறிவிடுகிறது. பசிக்கிறது என்பதற்காக நல்லது செய்தவனுக்கு தீமைச் செய்ய மனம் வரவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் சிறு தவறுகளுக்குக் கூட கணவன், மனைவி, பிள்ளை, உறவினர் என்று யாரையும் கணக்கில் எடுக்காமல்  தண்டனை வழங்கி விடுகிறோம். ஆயிரம் நன்மைச் செய்தவர்கள் கூட ஒரு தீமைச் செய்தால் அவன்/அவள் கணவனாக, மனைவியாக இருப்பதற்கு அருகதையற்றவர்கள் என்று முடிவெடுத்து விடுகிறோம்.

"தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." (கொலோசெயர் 3:15) என்று பவுலடியார் அழகாக குறிப்பிட்டுள்ளார். இதனை இதயத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி