நமக்கு எதிரி யார்?

 


அலுவலகத்திற்கு பரபரப்பாக அனைவரும் வந்துக் கொண்டிருந்தனர். சரியான நேரத்திற்கு வரவில்லையென்றால் திட்டு வாங்க வேண்டிய சூழல் வரும் என்பதால் வேகமாக நுழைந்துக் கொண்டிருந்தார்கள். போகிற வேகத்திலே அறிவிப்பு பலகையைப் பார்த்துக் கொண்டே சென்ற போது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியான மரண அறிவிப்பு செய்தி ஓன்று எழுதப்பட்டிருந்தது கவனத்தை திருப்பியது, "உங்களுடைய வெற்றியைத் தடுத்துக் கொண்டிருந்த உங்கள் அலுவலக பணியாளர் இறந்து விட்டார். மாலை 4 மணிக்கு இறுதி சடங்குகள் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும்.   அனைவரும் வாருங்கள்" என்று அழைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.    

அந்த கம்பெனி மிகவும் பெரியது. ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டும், பொறாமை உணர்வுடன் செயல்படுவதும் இயற்கை. Promotion பெறுவதில் குடுமி சண்டையும் இடையிடையே பனிப்போராக நடை பெறுவதும் சகஜமாக இருந்தது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் எதிரி என்று யாரை நினைத்தார்களோ அவன்/ள் தான் அவுட் ஆகிவிட்டான்/ள் என்று கணக்கு போட்டுக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இறுதி அஞ்சலிக்காக குறிப்பிட்ட இடத்திற்குள்ளே வந்த போது ஒவ்வொருவராக அறைக்குள் அனுப்பப்பட்டார்கள். உள்ளே சென்ற போது சவப் பெட்டிக்குள் உற்றுப் பார்த்தார்கள். தங்கள் வெற்றியை தடுத்து நிறுத்தும் நபரை முகமலர்ச்சியோடு பார்த்த போது உள்ளே அவரவர் முகமூடி காட்சியளித்தது! அதிர்ந்துப் போனார்கள்!! காரணம் உள்ளே ஒரு அவரவர் முகத்தைக் காட்ட கண்ணாடி ஒன்றே வைக்கப்பட்டிருந்தது.

வெளியே பேய் அறைந்த முகத்தோடு வந்த போது அதற்காகவே காத்துக் கொண்டிருந்த GM அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு எதிரி நீங்கள் தான்!   உங்கள் தோல்வியையும், வெற்றியையும் நீங்களே நிர்ணயிக்கிறீர்கள்!" என்றார்.   

வாழ்க்கையில் தங்களுக்கு எதிரி மற்றவர்கள் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம் தான் நமக்கு எதிரியாக இருக்கிறோம். பலருடைய தாழ்வு மனப்பான்மையே அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கும் சக்தியாக காணப்படுகிறது. பிறர் என்ன நினைப்பார்களோ என்று பயந்து பயந்தே பின்னுக்குச் சென்று விடுகின்றனர். யார் என்ன நினைத்தால் என்ன நான் நியாயமாக, சரியாகச் செய்கிறேன் என்றால் துணிந்துச் செய்ய மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் நாம் ஒரு செயலை புதிதாகச் செய்ய முனையும் போது கேலியாக பேசுவார்கள், விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் நம்முடைய செயலில் வெற்றி மேல் வெற்றியை இறைவன் அருளும் போது கைத்தட்டி மாலைப் போட நமக்கு வரிசையில் நிற்பார்கள். எனவே மற்றவர்களை எண்ணி எண்ணி ஒரு காரியத்தை செய்ய முயன்றால் ஒரு காரியமும் சித்திப் பெறாது.

ஒரு தொழிலை நண்பர்களோடு செய்யும் போது கூட நாம் பிறரை சந்தேகத்துடன் அணுகுகிறோம். குறிப்பிட்ட  நாளில் ஏமாற்றி நம்மை கழற்றி விட்டு விடுவார்களோ என்ற பய உணர்வு மேலோங்குகிறது. இந்த செயல் சிலருக்குப் பெரிய எதிரியாக அமைந்து விடுகிறது. உண்மையிலேயே அவனு/ளுடைய நண்பர்கள் நல்லவர்கள். ஆனால் நீங்கள் உங்களுக்குள்ளாகவே பயந்து மற்றவர்களை சந்தேக உணர்வோடு அணுக நினைக்கிறீர்கள். எனவே நண்பர்களைப் பார்த்தே நடுங்க வேண்டிய சூழல் வந்து விடுகிறது. நல்லவர்களையே துரோகியாக நினைத்தால் இரவில் தூக்கம் கூட வராது. நிம்மதியாக வாழ இயலாது.   நாம் நிச்சயமாக மனநல மருத்துவரைத் தான் அணுக வேண்டும் அல்லது ஆலோசனை (Counselor) தருபவர்களைத் தான் அணுக வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கையோடு, இறைவன் துணையோடு துணிந்து செயல்பட முற்படுங்கள்.

கிதியோனைப் பார்த்து, 'பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார்" என்று தேவ தூதன் கூறியது போன்று இப்பொழுது உங்களோடும் கூறுகிறார்.   நம்பிக்கையோடு செயல்படுங்கள். வெற்றியை இறைவன் அள்ளித் தருவார்

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?