அன்பின் கரங்கள்

 


Business Today என்ற பத்திரிக்கையில் ஏப்ரல் 9, 2021 அன்று ஒரு செய்தி கீழ்கண்ட தலைப்பில் வெளிவந்தது. "Hand of God : Brazil nurses device novel idea to comfort Covid-19 patients”. இதன் கீழ் ஒரு படம் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு Covid-19 னால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரின் கையின் மேலும், கீழும் இரண்டு கைகள் படும் படியாக இருந்தது.  

அந்த இரண்டு கரங்களும் உண்மையான கரங்களல்ல. அவை மருத்துவர்கள் பயன்படுத்தும் கை உரைகள். அவைகளுக்குள் லேசான சூடான தண்ணீரை அடைத்து வைத்தனர். பின்னர் அதனை Covid-19  பாதிக்கப்பட்ட மனிதர்களின் கையின் மேலும் கீழுமாக வைத்து கட்டி விட்டனர்.   ஏன் தெரியுமா?

கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் வாதிக்கப்பட்டனர். அவர்கள் உறவினர்களோ, நண்பர்களோ பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. பார்க்க சென்றாலும் நமக்கு கொரானாவால் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து மக்கள் விலகியே நின்றனர். இதனால் உறவுகள் யாருமின்றி மனதளவில் தனிமைப்படுத்தப்பட்டனர். இது அவர்கள் உள்ளத்தை உடைத்தது. யாரும் தன்னை கவனிக்கவில்லையே. ஆதரவாக யாரும் இல்லையே என்று ஏங்கி ஏங்கி மரணத்தின் எல்லைக்கு சென்றதை பிரேசில் நாட்டு செவிலியர்கள் கண்டனர். அவர்கள் தான், இந்த முறையைக் கண்டு பிடித்தனர்

ஒரு கரம் நம்மை தொடுகிறது என்ற உணர்வு கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்த போது உள்ளத்தில் ஒரு சமாதானம். மனதளவில் ஒரு திருப்தி ஏற்படுவதை அவர்கள் முகங்களில் கண்டனர். இதனைத்தான் கடவுளின் கரங்கள் என்று செய்தித்தாள் வெளியிட்டது !

இன்றும் தொடுதல் என்பது அன்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்து வருகிறது. பிள்ளைகள் பள்ளி கூடங்களில் நண்பர்களுடன் சண்டையிட்டு பிரச்சனைகளோடு வீட்டிற்கு வருவார்கள். அப்பொழுது ஆறுதலாக தோளில் கரங்களை வைத்து பேசினால் அவர்கள் உள்ளம் ஒரு அமைதியைப் பெறுகிறது. அதேப்போல் அலுவலகத்தில் டென்சனாகி வரும் கணவன் அல்லது மனைவியை தொட்டுப் பேசினாலே அவர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி  ஏற்பட்டு விடும். நமது பிரச்சனையைக் கேட்க ஒரு நபர் இருக்கிறார், என்னைப் புரிந்துக் கொள்ள ஒரு நபர் இருக்கிறார், தன்னை அரவணைக்க ஒரு நபர் உலகில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்வார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 

இயேசுவானவரும் தொழுநோயாளிகள் மேல் கைகளை வைத்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் காலத்தில் தொழுநோயாளிகள் மக்களோடு மக்களாக வாழாமல் தனித்து வைக்கப்பட்டனர். மக்களுடன் பேசி மகிழ்வதற்கு வழியில்லாமல் இருந்தனர். ஊரை விட்டே விலக்கி வைக்கப்பட்டனர்.   அப்படி தனித்து விடப்பட்ட, சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்ட, அருவருக்கப்பட்ட மனிதர்கள் மீது தமது அன்பை வெளிப்படுத்துமாறு தன் கைகளை அவர்கள் மீது வைக்கிறார். அது அவர்களுக்கு ஆறுதலையும், விடுதலையையும் கொடுத்தது.

இன்று பிறந்த பிள்ளைகளைக் கூட சில மாதங்களுக்குள் வேலைக்காரர்களிடம் வளரும் சூழலுக்குள்ளாக வந்து விடுகிறது. எனவே அரவணைக்கும் அன்பு செலுத்தும் சூழல்களை இன்றைய சிறு பிள்ளைகள் இழந்து விடுகிறது. பணத்தை மையமாகக் கொண்டு மனிதர்கள் வாழ்வதினால் பாட்டி, தாத்தா என்ற அரவணைப்பையும் பிள்ளைகள் இழந்து தனித்தே வளர்கிறது. பாச பிணைப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலைமை மாறுவது சமுதாயத்திற்கு நல்லது.

கோழி குஞ்சுகளுக்கு தாய் கோழியின் அரவணைப்பும், Warmupம் எப்படி தேவைப்படுகிறதோ அப்படியே பிள்ளைகளுக்கும் பெற்றோருடைய அரவணைப்பு அவசியம். வயதானவர்களுக்கும் பிள்ளைகளின் அரவணைப்பு அவசியம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

நற்கிரியை செய்யும் பெண்

கவர்ச்சியா? கண்ணியமா?