போலி வாழ்க்கைக்கு அழைக்கும் முகநூல்


காணாத ஒருவரை கற்பனைச் செய்து திருமணத்திற்கு காத்திருப்பதை முன்பெல்லாம் திரைப்படத்தில் மட்டும் தான் காணமுடிந்தது. ஆனால் நிஜ வாழ்விலும் அவை நடைபெறுமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்படிப்பட்ட நிகழ்வானது கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது. மக்களுடைய வாழ்வில் முகநூல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. குறிப்பாக "prank" என்பது வலைதளங்களில் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கிறது.

முகநூலில் போலியான பெயரில் பலர் உலா வருகின்றனர். ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும், 70 வயது ஆண் 17 வயது பையனைப் போலவும் உருமாறி வருகின்றனர். கொரானா மட்டும் தான் உருமாறும் என்று நினைக்காதிருங்கள். முகநூல் நண்பர்களும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, கணிக்க முடியாத அளவிற்கு உருமாறிக் கொண்டே இருக்கின்றனர். வேடிக்கையாகவும், விபரீதமாகவும் முகநூல் நண்பர்கள் செயல்படக்கூடும். எது போலி, எது உண்மை என்று கண்டறிவது கடினம். போலியை நம்பி உங்கள் கணவன், மனைவியை அல்லது பிள்ளையை தூக்கி எறிந்து விடாதிருங்கள்.

கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள கல்லுவாதுக்கள் பகுதியில் ஒரு இளம்தம்பதியர் வாழ்ந்து வந்தனர். கணவன் வளைகுடா நாட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஊருக்கு வந்து குடும்பத்தோடு மகிழ்ந்து வந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. இரண்டாவது குழந்தையும் கருவுற்ற நிலையில் இருந்தார் அவரது மனைவி.

இந்நிலையில் முகநூல் பயன்படுத்தும் பழக்கம் அந்த இளம்பெண்ணுக்கு இருந்து வந்தது. அவருடைய முகநூல் பக்கத்தில் ஆனந்த் என்ற பெயருடன் நட்பு வேண்டுகோள் வந்து நின்றது. அந்த ஆனந்த் யார்? ஏன் நம்முடன் பழக விரும்புகிறார்? நம்முடைய உறவினரா? அல்லது தேவையற்ற பயங்கரவாதியா? என்ற சிந்தனை எதுவும் செய்ய விரும்பாமல்  Accept கொடுத்தார். அந்த ஆனந்த் மிகவும் அன்பாகவும், பேசி பழக நல்லவராகவும் காணப்பட்டார். எனவே முகநூலில் உறவு வளர்ந்து வர ஆரம்பித்தது. முன்பின் தெரியாத அந்த நபருடன் காதலை வளர்த்துக்கொண்டார் அந்த திருமணமானப் பெண்.

நாட்கள் ஆக ஆக அந்த முகநூல் நண்பரான ஆனந்த் கண்டிசன் போட ஆரம்பித்தார். நீ ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுவேன். இரண்டு என்றால் முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்டான்.

புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அந்த இளம் பெண் தான் இரண்டாவது கருவுற்றிருப்பதை தன் கணவருக்கோ குடும்பத்தினருக்கோ சொல்லாமல் மறைத்தே வாழ ஆரம்பித்தாள். இறுதியில் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றேடுத்தாள். பெற்றத்தாயே பிள்ளையை அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வீசி எறிந்தாள். பாரிப்பள்ளியில் உள்ள போலிஸ் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.

குழந்தையின் தாய் யார் என்பதைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள இளம்பெண்களுக்கு  டி.என்.ஏ சோதனைச் செய்யப்பட்டதில் ரேஷ்மா என்று இளம்பெண்  சிக்கினார். காரணத்தை விசாரித்தபோது தான் உண்மை வெளிப்பட்டது. தான்  ஆனந்த் என்ற வங்கியில் பணிபுரியும் நபருடன் தொடர்பில் இருப்பதால் தான் இப்படிச் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த ஆனந்த் என்பது உண்மையான ஆண் நபர் அல்ல. ஆர்யா, கிரிஷ்மா என்ற இரு பெண்கள் "prank" செய்ய விரும்பி விளையாட்டாக அனந்த் என்ற பெயரில் சாட்டிங் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. ஆனால் இந்த உண்மைத் தெரியாமல் அந்த இளம் பெண் வீணாக போலியான நபர் மீது காதலை வளர்த்துக்கொண்டு, ஒரு குழந்தையைக் கொன்று விட்டார்.

இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை எந்த விதத்தில் எல்லாம் சின்னாபின்னமாக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்து விடுகிறோம். ஒரு தவறைச் செய்ய மற்றொரு தவறைச் செய்கிறோம்.

திருமறையில் மல்கியா தீர்க்கதரிசி குறிப்பிடும் போது "கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே." (மல் 2:14), என்று ஆண்டவர் எச்சரிக்கிறார். நமது வாழ்க்கையினாலே கர்த்தரை வருத்தப்படுத்தாமல் இருக்கவேண்டும் என கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். கர்த்தருக்கென்று சாட்சியாக வாழ கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : என் ரூபவதியே கதவை திற 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

புதிய செய்திகளை Daily படிக்க facebook.com/tdtachristian ஐ Like பண்ணுங்கள் 

Comments

Popular posts from this blog

உண்மையை உரக்க சொல்வோம்

உண்மையை மூலதனமாக்கு

தேன் தடவிய வார்த்தைகள்